
60,000 பட்டதாரிகள் நியமனத்தில் 465 பேருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்பதை திகதியுடன் சபைக்கு உரியவர்கள் அறிவிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
60,000 பட்டதாரிகள் நியமனத்தில் 465 பேருக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் ஏற்கெனவே பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுளளது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்தக் குழுவுக்கு இவ்விடயத்தை ஆற்றுப்படுத்தி இப்பிரச்சினையை தீர்ப்பதாகவும் கூறியிருந்தார்கள்.
பிரதமர், சபை முதல்வர் ஆகியோருக்கு ஒரு விடயத்தை கூற விரும்புகின்றேன்.
465 பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி எப்போது உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்பதை திகதியுடன் இந்த சபைக்கு தெரியப்படுத்துங்கள்.
அதேபோன்று 2019, 2020 முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் 2300 வெற்றிடங்களுக்கு 690 பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.
அதற்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஆனால் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்துக்கு அமைவாக இந்த ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, 2300 வெற்றிடங்களுக்கு பொறுத்தமான 690 பேரை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்யுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன்.