
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புனர்வாழ்வளித்தல் சட்ட மூலம் ஜனநாயகத்திற்கு முரணானதல்ல. எந்தவொரு சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவினரே இதற்கும் எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றனர்.
ஜனநாயக விரோதமான எந்தவொரு செயற்பாட்டிலும் அரசாங்கம் ஈடுபடவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வளித்தல் சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் சிறுபான்மையினர் மீது அல்லது அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படக் கூடும் என்பதால், அரசாங்கம் அதனை மீளப்பெற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகமும் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் (18) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெளிவுபடுத்துகையில் ,
அரசியமைப்பிற்கு முரணான எந்தவொரு சட்ட மூலத்தையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது. எந்தவொரு சட்ட மூலமானாலும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து அதற்கு ஒரு சில தரப்பினர் எதிர்ப்பினை வெளிப்படுத்துவது வழமையான செயற்பாடாகும்.
அவ்வாறு நீதிமன்றத்தை நாடும் போது நீதிமன்றத்தினால் குறித்த சட்ட மூலம் ஜனநாயகத்திற்கு விரோதமானதா?, சட்டத்திற்கு முரணானதா ? மற்றும் அரசியலமைப்பிற்கு முரணானதா? என்பது தொடர்பில் ஆராயப்படும். அதற்கமைய அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடுகள் இடம்பெற்றால், அந்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்படமாட்டாது.
அவ்வாறானவை தொடர்பில் நீதிமன்றத்தினால் பாராளுமன்றத்திற்கும் அறிவிக்கப்படும். குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய உறுப்புரைகள் தொடர்பிலும் தெரியப்படுத்தப்படும்.
மாறாக திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால், சர்வசனவாக்கெடுப்பினை நடத்துமாறு நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். எனவே அரசியலமைப்பினைப் பாதுகாப்பதற்கு அப்பால் அரசாங்கத்தினால் வேறு எந்தவொரு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என்றார்.