
நாட்டுக்கு தேவையான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் தேசிய மட்டத்தில் பல்கலைக்கழகம் நிறுவப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கல்லூரிகளை பல்கலைக்கழக மட்டத்துக்கு கொண்டு வருவதற்கான பல கோரிக்கைகள் தம்மிடம் இருந்ததாகவும் இது குறித்த பூர்வாங்க கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதும் பாடங்களின் வகைக்கு ஏற்ப பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றார்.
மூன்று வருட கல்வி மற்றும் ஒரு வருட ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட்டதும், நான்கு வருடங்களில் தகுதியான ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்கு நுழைவார்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர், இதை தவறாக புரிந்து கொள்ளவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.