
முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளை மகாவலி எல் வலயத்துடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த முயற்சிக்கு கடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடுமையான ஆட்சேபனையை தெரிவித்ததைத் தொடர்ந்து இத்திட்டம் இடைநிறுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
அதேவேளை அதற்கான பணிப்புரையையும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கியதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவில் கொக்குளாய் கொக்குத்தொடுவாய் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 06 கிராம சேவகர் பிரிவுகளை மகாவலி எல் வலயத்துடன் இணைப்பதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுமார் 70வீதத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழுகின்ற குறித்த கிராம சேவகர் பிரிவுகளை மகாவலி எல் வலயத்துடன் இணைப்பதற்கு எவ்விதமான அவசியமும் இல்லை என்பதை தெளிவுபடுத்தினார்.
இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனங்களை ஏற்படும் என எடுத்துரைத்தார்.
இந்நிலையில் குறித்த முயற்சிகள் நிறுத்தப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அது தொடர்பான அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு உடனடியாக வழங்கியதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.