அரசியலமைப்பின் 22 வது திருத்தம் மீதான விவாதம் காலம் தாழ்த்தப்படாது – அரசாங்கம் அறிவிப்பு!

அரசியலமைப்பின் 22 வது திருத்தம் அமைச்சரவையின் அனுமதியுடனேயே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே அதற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் என்ற ரீதியில் நாம் தீர்மானித்துள்ளோம். இத்திருத்தத்தின் மீதான விவாதத்தை மேலும் காலம் தாழ்த்துவதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் அரசாங்கத்திற்கு இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இதன் போது 22 ஆவது திருத்தம் மீதான விவாதத்தை மேலும் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்று கேட்கப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இது குறித்த விவாதம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 22 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்குகளைப் பயன்படுத்துவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அனுமதியுடனேயே அத்திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எனவே அமைச்சரவை அமைச்சர்கள் என்ற ரீதியில் நாம் அதற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளோம். இதில் எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்பதை ஓரிரு தினங்களில் பாராளுமன்றத்தின் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என்றார்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் கடந்த பாராளுமன்ற அமர்வின் போது சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் , அதன் மீதான விவாதம் ஒத்தி வைக்கப்பட்டது.

குறித்த திருத்தத்தில் காணப்படும் முக்கிய உறுப்புரைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவும் , முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலையீட்டின் காரணமாகவுமே விவாதம் ஒத்தி வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தி வருகின்றன.

எவ்வாறிருப்பினும் உள்ளுராட்சி தேர்தல்கள் குறித்த ஏற்பாடுகள் , இரட்டை குடியுரிமை மற்றும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான கால எல்லை தொடர்பில் உள்வாங்கப்பட்டுள்ள விடயங்களில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளாவிட்டால், 22 ஐ ஆதரிப்பதற்கு தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

இதேபோன்று 20 ஐ விட, 22 சிறந்த திருத்தம் என்பதால் சுதந்திர கட்சியும் இத்திருத்தத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளது.

எனினும் பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் புதிய அரசியலமைப்பே தற்போதைய தேவையாகவுள்ளது என்று வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *