
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவரும், வேட்பாளருமான மல்லிகார்ஜுன கார்கே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதன்மூலம் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பம் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவராகியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது.
மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிட்டனர். இந்தியா முழுவதும் 68 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
9 ஆயிரத்து 915 மாநில காங்கிரஸ் குழு பிரதிநிதிகள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிவடைந்தது டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் குழு தலைமையகத்துக்கு வாக்கு பெட்டிகள் நேற்று கொண்டு செல்லப்பட்டது. அங்கு வாக்குப்பெட்டிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டது.
இந்தநிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டனர். இதில் 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே அபார வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தேல்வியடைந்தார். 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.
தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றதை அடுத்து காங்கிரஸ் வரலாற்றில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆவது உறுதியாகியுள்ளது.
அவருக்கு முன்னர், காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்த நேரு குடும்பத்தைச் சேராரதவர் சீதாராம் கேசரி ஆவார்.
1996 ஆம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக 5 வருட காலத்துக்கு தெரிவானார். எனினும், 2 வருடங்களின் பின் 1998 ஆம் ஆண்டு அவர் அப்பதவிலிருந்து நீக்கப்பட்டார்.