திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவரது மனைவி சௌமியா (வயது 32). இவர் திருச்சி தில்லாநகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வணிகவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த ஜோடி காதல் திருமணம் செய்து கொண்டது. இவர்களுக்கு ரியா (11), சிவையா (6) என்ற 2 மகள்கள் உள்ளனர். பிரேம்குமார் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
இவர்களுடன் சௌமியா 13வது மாடியில் உள்ள பி.பிளாக்கில் வசித்து வந்தார். நேற்று இரவு சௌமியா மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார். இதை பார்த்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், நேற்று இரவு 8 மணிக்கு மேல் சௌமியா துணிகளை உலர்த்துவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
அதன்பின் அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக தெரிகிறது. துணி உலர்த்தும் போது நிலை தடுமாறி விழுந்து இறந்தாரா? அல்லது குடும்ப தகராறு காரணமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கீழே தள்ளி கொன்றார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.