20வது திருத்த சுப்பர்மேன் நாட்டைவிட்டுத் தப்பியோட்டம்- சபையில் சஜித் தரப்பு ஆவேசம்!

நாட்டில் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக சுப்பர் மேனை உருவாக்கியதாகவும் அவர் இறுதியில் நாட்டை அழித்து விட்டு நாட்டை விட்டு தப்பியோடியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தன்னிச்சையாக கொண்டு வரப்பட்டது. 20வது திருத்தச் சட்டம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக ஆராய்ப்படவில்லை. கோட்டாபய ராஜபக்சவின் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகி சில சட்டத்தரணிகள் இணைந்து 20வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு வெளியில் உருவாக்கினர்.

22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அப்போது சபாநாயகர் நிலையியல் கட்டளைச்சட்டம் உட்பட கட்டளைச் சட்டங்களை இடைநிறுத்தி, நாங்கள் எவரும் பார்க்காத 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்தனர்.

நாங்கள் எவரும் அதனை பார்த்திருக்கவில்லை. அந்த முறைமை சரியானதா என நான் விஜேதாச ராஜபக்சவிடம் கேட்கின்றேன். நீங்களும் அப்போது இருந்தீர்கள். நீங்கள் எதிர்க்கவில்லையே.

தாம் இருக்கும் அரசியல் கட்சியை சார்ந்து அரசியலமைப்புச் சட்டங்களை உருவாக்க முடியாது. எந்த அணியில் இருந்தால், அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்க கொள்கைகள் இருக்க வேண்டும்.

விஜயதாச ராஜபக்ச அன்று 19 வது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்தார். 20வது திருத்தச் சட்டத்திற்கும் வாக்களித்தார். தற்போது 20வது திருத்தச் சட்டம் தவறு என்று கூறுகிறார். என்ன இந்த கேலிக்கூத்து. எனக்கு இப்படியான நாடாளுமன்றத்தில் இருப்பது அருவருப்பாக உள்ளது. மாறி மாறி பேசுகின்றனர்.

20 வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் என்ற வகையில் 20 திருத்தங்களை கொண்டு வந்தேன்.

20வது திருத்தச் சட்டத்தை 19வது திருத்தச் சட்டத்திற்கு அருகில் கொண்டு வருவதற்கான 20 திருத்தங்களை முன்வைத்தேன். அவற்றை நிராகரித்தனர்.

20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த அமைச்சர் இங்கு இல்லை, அவர் ஒழிந்துக்கொண்டுள்ளார். அன்று நீதியமைச்சராக இருந்தவர் தற்போது ஒழிந்துக்கொண்டுள்ளார். 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த முன்னாள் நீதியமைச்சருக்கு நாடாளுமன்ற அவையில் இருப்பதற்குகூட தைரியம் இல்லை.

20 வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டால், எமது நாட்டுக்கு கிடைக்கும் சர்வதேச ஆதரவு இல்லாமல் போகும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சர்கள் விஜயதாச ராஜபக்சவும் அலி சப்றியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சென்றனர்.

2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கொண்டு வரப்பட்ட 20வது திருத்தச் சட்டத்தின் ஊடாக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பலமிக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ், இலங்கையின் பொருளாதார, அரசியல் நெருக்கடி வெளிப்பட்டது.

அந்த திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச விசாரணை ஆணைக்குழு, நீதி சேவை ஆணைக்குழு போன்ற பிரதான ஆணைக்குழுக்களின் சுயாதீனம் இல்லாமல் செய்யப்பட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தெரிவித்துள்ளது.

20 வது திருத்தச் சட்டத்தின் ஊடாக மூன்று ஆண்டுகள் நாடு அழிக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்றத்தின் அதிகாரம், சபாநாயகரின் அதிகாரம், பிரதமரின் அதிகாரம் ஆகியவற்றை எடுத்து ஜனாதிபதிக்கு வழங்கினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் நாம் எமது அதிகாரங்களை தக்கவைத்திருக்க வேண்டும். சுப்பர் மேன் ஒருவரை உருவாக்கினர். இறுதியில் அந்த சுப்பர் மேன் நாட்டு மக்களையும் நாட்டின் விவசாயிகளையும் அழித்தார்.

நாட்டின் அனைத்து துறைகளையும் அழித்தார். இறுதியி நாட்டை விட்டு சென்றார். நாட்டை ஓடியவர் நாடு திரும்பி அரச வீடு ஒன்றில் ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு ஓய்வை கழித்து வருகிறார்.

முழு நாட்டை அழித்து விட்டு, நாட்டில் இருந்து தப்பியோடி விட்டு, தற்போது திரும்பி வந்து, வெட்கமின்றி, அரசுக்கு சொந்தமான வீட்டில் ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு வசித்து வருகிறார். நாட்டுக்கு செய்த பாவத்தை போக்க விகாரைக்கு சென்று தங்குங்கள்.

அல்லது ஆஸ்ரமத்திற்கு செல்லுங்கள். இந்திய அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற வீடுகளில் இருப்பதில்லை ஆஸ்ரமத்திற்கு சென்று விடுவார்கள். எமது நாடு அழிந்து விட்டது. ரூபாவும் இல்லை, டொலரும் இல்லை  எனவும் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *