
கொழும்பு,ஒக் 20
போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கையூட்டல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கட்டுமான ஒப்பந்ததாரரான ஜப்பானின் தாய்சே நிறுவனத்திடம் அமைச்சர் இலஞ்சம் கோரியதாக எதிர்க்கட்சிகள் முன்பு குற்றம்சாட்டியிருந்தன. பின்னர், இது தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு, அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என அறிவித்தது.
ஆனால் அந்த குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது என்றும், அதை கையூட்டல் விசாரணை ஆணைக்குழு விசாரிக்க வேண்டும் என்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதன்படி, துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் முழுமையான விசாரணை நடத்த கையூட்டல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது. அதற்கமைய, அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என தெரியவந்துள்ளது.