மின் நிலையங்கள் மீது ரஷ்யாவின் தாக்குதலால் இருளில் மூழ்கிய உக்ரைன் நகரங்கள்

உக்ரைன்,ஒக் 20

உக்ரைன் மீதான போர் தாக்குதலை ரஷ்ய இராணுவம் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதில் தலைநகர் கிவ் உள்பட பல நகரங்களில் கடுமையான மின் தடை ஏற்பட்டுள்ளது. இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறும்போது,

“ரஷ்யாவின் தாக்குதலில் 40 சதவீத மின் நிலையங்கள் அழிக்கப்பட்டு விட்டன. இதனால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தியை சரி செய்ய முயற்சி நடக்கிறது. மாலை நேரங்களில் மின்சாரத்தை குறைவாகப் பயன்படுத்த மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று முதல் அத்தியாவசியமில்லாத மின்சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மின்சாரத்தை மக்கள் கவனமாக பயன்படுத்தினால் வரும் நாட்களில் மின் தடை நேரம் படிப்படியாக குறைக்கப்படும்” என்றார்.

உக்ரைனிலுள்ள முக்கிய மின் நிலையங்கள் ரஷ்யாவின் தாக்குதலில் கடுமையாக சேதம் அடைந்துள்ளதால் அந்நகரம் இருளில் மூழ்கியுள்ளது. உக்ரைனின் சில பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளதாகத் தெரிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *