
இறைமை சட்டவிலக்கு சட்டக்கோட்பாட்டில் சர்வதேச குற்றங்களுக்கும் சித்திரவதைக் குறத்திற்கும் விதிவிலக்கு கோரும் சட்டமாற்றத்துக்கான அரசியல் வேலைத்திட்டம்.
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நியாயாதிக்கத்தினை சட்டபூர்வமான தமிழீழ நாடாக ( de jure State of Tamil Eelam ) ஏற்றுக் கொள்ளல்
- உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழான சட்ட நடவடிக்கைகள்
ஜெனீவா, ஐ.நா மனித உரிமைச்சபையினைக் கடந்து நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான புதிய களங்களை உருவாக்கி தமிழர்கள் செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அதனை நோக்கிய நான்கு செயல்வழிப்பாதையினை அறிவித்துள்ளது.
சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சிறிலங்காவுக்கு தோல்வியாக இருந்தாலும் அது தமிழர்களுக்கு வெற்றியாக அமையவில்லை என நா.தமிழீழ அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் சபையின் மூலமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கான பாதையானது நீண்டதும் கடினமானதாக இருப்பதற்கான காரணம், மனித உரிமைகள் சபையானது, நாடுகளை மையமாகக் கொண்ட நிறுவனமாகும் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்நிறுவனங்களின் கட்டமைப்புக்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஓரு தரப்பாக இல்லை என்பதனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
அதிகார அரசியலுக்கே முன்னுரிமை கொடுக்கும் நாடுகளை மையமாகக் கொண்ட ஐ.நா மனித உரிமைச்சபை போன்ற மையங்களில், மனித உரிமைகள் இரண்டாம் பட்சமாகவே இருப்பது ஆச்சரியமான விடயம் ஒன்றல்ல. நாடுகளின் நலன்சார்ந்த களமாகவுள்ள மனித உரிமைகள் சபையாயில், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரமாகவே துரோகத்தை இழைக்கின்ற ஒன்றாகவே அதிகார மைய அரசியல் காணப்படுகின்றது எனவும் நா.தமிழீழ அரசாங்கம் தனது தார்மீகக் கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
மனித உரிமைகள் சபையானது கடந்த 2015ம் ஆண்டு எடுத்துக் கொண்ட நிலையிலிருந்து பின்வாங்குவதலே தற்போதைய மனித உரிமைகள் சபை தீர்மானமாகும். கடந்த 2015ம் ஆண்டில் கலப்பு நீதிமன்றமொன்றை மனித உரிமைகள் சபை கோரியிருந்ததுடன், சிறிலங்கா அதற்கு மறுத்திருந்த நிலையில், தனது கலப்பு நீதிமன்ற நிலையிலிருந்து உள்நாட்டு பொறிமுறையாக மனித உரிமைகள் சபை மாற்றியிருந்தது. இராணுவம் மற்றும் பௌத்த பிக்குகளின் உதவியோடு சிங்கள பௌத்த பேரினவாத இனநாயக கொள்கை நோக்கி சிறிலங்கா நகர்வதை ஆணையாளரின் அறிக்கை வெளிப்படுத்தியிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு உள்நாட்டு பொறிமுறையொன்றை மனித உரிமைகள் சபை கோருவதானது ஒன்றுக்கொன்று முரண்பாடானதாகும் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், எந்தவொரு விசாரணையின் முடிவிலும் கூட்டுக்குற்றவாளிகளாக முழு சிங்கள சமூகமே பொறுபேற்க வேண்டிய உண்மை வெளியாகும் என்ற காரணத்தினால் எந்தவொரு விசாரணையையும் சிங்கள சமூகம் ஒருபோதுமஇ அனுமதிக்காகது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பரிணமித்து வரும் சர்வதேச சட்டம், சர்வதேச உறவுகள் வழங்குகின்ற வெளியினை வழியாக கொண்டு, பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையொன்று பாதிக்கப்பட்டவர்களால் உருவாக்கப்பட வேண்டியது தவிர்க்கப்பட முடியாதது என தெரிவித்துள்ள நா.தமிழீழ அரசாங்கம், நான்கு செயல்முனைப்புக்களை அறிவித்துள்ளது.
- பாதிப்புற்றோர் வழிநடத்தும் பன்னாட்டு நீதிக்கான இயக்கம் (Victim Driven Project)
- இறைமை சட்டவிலக்கு சட்டக்கோட்பாட்டில் சர்வதேச குற்றங்களுக்கும் சித்திரவதைக் குறத்திற்கும் விதிவிலக்கு கோரும் சட்டமாற்றத்துக்கான அரசியல் வேலைத்திட்டம்.
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நியாயாதிக்கத்தினை சட்டபூர்வமான தமிழீழ நாடாக ( de jure State of Tamil Eelam ) ஏற்றுக் கொள்ளல்
- உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழான சட்ட நடவடிக்கைகள்
ஆகிய செயற்திட்டங்களை அறிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இச்செயல்முனைப்பில் இணைந்து பங்காற்றுவதற்கான பொதுஅழைப்பினை அமைப்புக்கள், வல்லுனர்கள், அனைவரிடமும் கோருகின்றது.
குறித்த [email protected] இந்த மின்னஞ்சல் ஊடாக பங்காற்ற விரும்புவோர் தொடர்பு கொள்ள முடியும் அறிவிக்கப்படுவதோடு, நான்கு செயற்திட்டங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தினை அறிவித்துள்ளது.
பாதிப்புற்றோர் வழிநடத்தும் பன்னாட்டு நீதிக்கான இயக்கம் (Victim Driven Project)
கடந்த 2020ம் அறிமுக்கப்படுத்தப்பட்ட இந்த செயற்திட்டத்தினை கூர்மைப்படுத்தல்.
சர்வதேச சட்டங்களில் அங்கீகரிக்கப்பட்டுவரும் ‘உண்மைகளை அறியும்’; உரிமையின் அடிப்படையிலும் ( right to the truth ) ‘தெரிந்து கொள்வதற்கான உரிமையின்’; அடிப்படையிலும் ( right to the know ) பாதிக்கப்பட்டவர்களே வழிநடத்தும் பன்னாட்டு நீதிக்கான செயற்திட்டம் இது.
மேற்குறிப்பிட்ட உரிமைகளின் அடிப்படையில், ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலராலும், ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர்களாலும் சிறிலங்காவில் இழைக்கப்பட்ட சர்வதேச சட்டக் குற்றங்கள் தொடர்பில் நடத்திய மூன்று புலனாய்வுகளில் திரட்டிய தகவல்களை பாதிக்கப்பட்டவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கோருதல்.
இறைமை சட்டவிலக்கு சட்டக்கோட்பாட்டில் சர்வதேச குற்றங்களுக்கும் சித்திரவதைக் குறத்திற்கும் விதிவிலக்கு கோரும் சட்டமாற்றத்துக்கான அரசியல் வேலைத்திட்டம்
கம்போடியா, முன்னாள் யுகொஸ்லாவியா, ருவான்டா ஆகிய நாடுகளில் நடபெற்ற இனப்படுகொலை அந்தந்த நாடுகளாலேயே மேற்கொள்ளப்பட்டது போல், தமிழினவழிப்பும் சிறிலங்காவினாலேயே மேற்கொள்ளப்பட்டநிலையில், சர்வதேச குற்றங்களுக்கும்,சித்திரவதையைக் குற்றத்திற்கும் இறைமை சட்டவிலக்கு சட்டக்கோட்பாட்டில் விதிவிலக்கு அளிக்கும் அரசியல் சட்டமாற்றத்துக்கான வேலைத்திட்டம் இது.
இதன்வழி வெளிநாடுகளில் அந்தந்த நாடுகளின் உள்நாட்டு தீர்ப்பாயங்களில் நாடுகளிற்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் குடியியல் சட்ட நடவடிக்கை எடுக்க உதவும்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் சர்வதேச மன்னிப்புச் சபையினால் இதற்கான செயற்திட்டம் முன்னெடுக்கப்;பட்டிருந்தது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நியாயாதிக்கத்தினை சட்டபூர்வமான தமிழீழ நாடாக ( de jure State of Tamil Eelam ) ஏற்றுக் கொள்ளல்
சர்வதேச சட்ட நியாயாதிக்கத்தின் ‘ரோம்’ உடன்படிக்கையில் சிறிலங்கா ஒப்பமிட வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாள் ஆணையாளர்களினால் சிறிலங்கா அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட போதும்,சிறிலங்கா இன்று வரை அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இலங்கைத்தீவில் சட்டபூர்வமான தமிழீழ நாடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நியாயாதிக்கத்தினை ஏற்றுக் கொள்ளும் வகையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பதிவாளருக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இச் செயற்பாடு ‘இறைமை மீளத்திரும்புதல்’ ( Reversion To Sovereignty ) என்ற சட்டக் கேட்பாட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
இம் முன்னெடுப்பு பொறுப்புக் கூறலுக்கும், எமது சுதந்திர தமிழீழம் அமைப்பதற்கான அரசியல் செயல்பாடுகளுக்கும் வலுச் சேர்க்கும் என திடமாக நம்புகின்றோம்.
உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழான சட்ட நடவடிக்கைகள்
பாதிப்புற்றோர் வழிநடத்தும் பன்னாட்டு நீதிக்கான செயல்முனைப்பின் ஓர் அங்கமாக, உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ், பல்வேறு நாடுகளில் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான செயற்திட்டம்.
இதற்கு வலுவூட்ட சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகமானது சிறிலங்கா தொடர்பில் சேகரித்த, சேகரித்து வரும் ஆதாரங்களை பாதிக்கப்பட்டவர்களின் பகிர்ந்து கொள்ள கோருதல்.