மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை அடிப்படையாககக் கொண்டு விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்-உதயகுமார் கோரிக்கை!

மலையக மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை அடிப்படையாககக் கொண்டு விசேட ஆணைக்குழு அல்லது ஜனாதிபதி செயலணி அல்லது பாராளுமன்ற குழு நியமிக்கப்பட வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் இன்று ஏழை பணக்காரர்,என அனைத்து தரப்பினரையும், தராதரம் பாராது, பாதித்துள்ள பொருளாதார பிரச்சினை தொடர்பிலும் – விசேடமாக இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகத் திகழும் பெருந்தோட்ட மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பிலும், இந்த உயரிய சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்களால் பிரேரணை ஊடாக கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி நிலை இன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டாலும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் வெளிச்சத்திற்கு
வருவதில்லை. ஆனால், இம்முறை ஐக்கிய நாடுகள் சபை வரை எமது பெருந்தோட்ட மலையக மக்களின் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சமுர்த்தி கொடுப்பனவு மற்றும் கொரோனா நிவாரண திட்டத்திலும் இவ்வாறு தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தொழில் செய்யாதவர்கள் என பிரிவுகளை ஏற்படுத்தி பாராபட்சம் காட்டப்பட்டது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

சமுர்த்தி கொடுப்பனவிலும் மலையக மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.
உதாரணமாக, கண்டி மாவட்டத்தில் 96,000 குடும்பங்களுக்கு சமுர்த்தி வழங்கப்படுகையில் அதில் 7,600 குடும்பங்கள் மாத்திரமே பெருந்தோட்ட மக்கள் அதேபோல பதுளை மாவட்டத்தில் 75,000 பேரில் 10,500 மாத்திரமே பெருந்தோட்ட மக்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் 53,000 குடும்பங்களில் பெருந்தோட்ட மக்கள் 16,000 மாத்திரமே. ஆகவே, பெருந்தோட்ட மக்கள் தொடர்நது புறக்கணிக்கப்பட்டு வருவது தெளிவாக தெரிகிறது.

இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் அனைவரும் சம்மாக
கவனிக்கப்பட வேண்டும்.

கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை, அதிக அளவில் பெருந்தோட்டத் துறையில் இருப்பதாக – உலக உணவுத் திட்டம் செப்டெம்பர் 2022க்கான தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், மலையக மக்களுக்கு கோதுமை மா நிவாரணம், மண்ணெண்னை நிவாரணம், உர நிவாரணம் அரிசி நிவாரணம் உள்ளிட்ட பல நிவாரணங்கள் தற்போதைய அவசர தேவையாக இருக்கின்றன.

எனவே, இவற்றை முறையாக நடைமுறைப்படுத்த – மலையக மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை அடிப்படையாககக் கொண்டு – விசேட ஆணைக்குழு அல்லது ஜனாதிபதி செயலணி அல்லது பாராளுமன்ற குழு நியமிக்கப்பட வேண்டும் என நான் இந்த சபையில் பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.

இதன் மூலமாவது பெருந்தோட்ட மலையக மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவோம்.” என் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *