
நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரனுக்கும் சபைக்கு தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்கவுக்கும் இடையில் வாத விவாதம் இடம்பெற்றது.
இந்நிலையில், 22வது அரசியலமைப்பு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், சிங்கள தலைவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வரலாற்றில் அரசியல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளன என்று சுட்டிக்காட்டினார்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன இறக்கும் காலத்தில் சமஸ்டிக் கொள்கையே இலங்கைக்கு பொருத்தம் என்று கூறியதாக தெரிவித்த ஸ்ரீதரன், அவரின் பின் வந்த லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க, ஆர். பிரேமதாச , மஹிந்த ராஜபக்ச போன்றோரும் இனவாதத்தையும், பௌத்தவாதத்தையும் முன்னிறுத்தி செயற்பட்டதாக குற்றம் சுமத்தினார்.
இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய மயந்த திசாநாயக்க, ஸ்ரீதரனை விளித்து, தமது தந்தையான காமினி திசாநாயக்க, இனவாதி அல்ல என்று குறிப்பிட்டார்.
கருத்துக்களை கூறும்போது சரியான கருத்துக்களை கூற வேண்டும் என்றும் இதற்கு தாம் இடம்தரப்போவதில்லை என்றும் மயந்த திசாநாயக்க தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், ”உங்களுடைய தந்தை இனவாதியாக இல்லாவிட்டால், எதற்காக யாழ்ப்பாண நுாலகத்தை எரியூட்டினார்” என்று கேள்வி எழுப்பினார்.
எனினும் இதனை மறுத்த மயந்த திசாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனை தொடர்ந்தும் எச்சரித்தார்.
இதற்கு பதிலாக ஸ்ரீதரனும், அக்கிராசனத்தில் இருந்துக்கொண்டு ”நீங்கள் எனது கருத்துச் சுதந்திரத்துக்கு இடையூறை ஏற்படுத்தக்கூடாது” என்று குறிப்பிட்டார்.
பிறசெய்திகள்