யாழ்ப்பாண பண்பாடு மிகவும் தொன்மை வாய்ந்தது! – அரச அதிபர் பெருமிதம்

எங்களுடைய பண்பாடு என்பது ஒரு இனத்தினுடைய இருப்புக்கான அடித்தளமாக காணப்படுகிறது. பண்பாட்டை வெறுமனே ஒரு சொல்லுக்குள் அடக்கி விட முடியாது. அந்தவகையில் எங்களுடைய யாழ்ப்பாண பண்பாடு மிகவும் தொன்மை வாய்ந்தது. பாரம்பரியம் மிக்கது என யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட பண்பாட்டு பேரவையும், யாழ்.மாவட்ட செயலகமும், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய மாவட்ட பண்பாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பண்பாட்டு விழுமியங்களை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும்.எங்களை பொறுத்த வரையிலே ஒரு உறுதியான பண்பாடு, கலாசார, ஒழுக்க, விழுமியங்கள் பேணப்பட்டால் அந்த பண்பாடு நிச்சயமாக நின்று நிலைக்கக்கூடிய தன்மை இருக்கின்றது.

ஆகவே இந்த பண்பாட்டு விழாவிலே பண்பாடு, கலாசாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை செயற்படுத்தி உருக்கொடுத்துக்கொண்டிருக்கின்ற கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் பல்வேறுபட்ட துறைசார் நிபுணர்களையும் நாம் காலத்திற்கு காலம் அழைத்து கௌரவிப்பது வழக்கம். அந்தவகையில் இந்த தடவையும் இந்த கௌரவிப்பு இடம்பெற்றது.

எங்களுடைய பண்பாடு என்பது மிகவும் தனிச் சிறப்பு வாய்ந்தது. பண்பாடு என்றால் அது யாழ்ப்பாணத்து பண்பாடு என்று சொல்லபடுகின்ற வகையில் உலகத்தவர்களால் மதிக்கப்படுகின்றதுடன் போற்றவும் படுகிறது.

எனவே எங்களுடைய பண்பாட்டு அம்சங்களை எங்கள் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடுகிறோம். கடந்த 2 வருடங்களாக பல்வேறு நெருக்கடிகளுக்கு உட்பட்டிருந்ததால் இதனை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் இந்த முறை எங்கள் பிரதேச மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் கொண்டாடுவதற்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *