
இந்த பெரும் போகத்தில் இருந்து தேவையான இரசாயன உர கையிருப்பு விவசாயிகளுக்கு கிடைக்கும் என்பதால் அடுத்தாண்டு இறுதிக்குள் இலங்கை அரிசி மற்றும் சோளத்தில் தன்னிறைவு அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.ஆர். புஷ்பகுமார தெரிவித்தார்.
உலக வங்கியின் நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட யூரியா உரத்தின் முதலாவது தொகுதி ஒக்டோபர் 25ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளதாகவும், இரண்டாவது சரக்கு நவம்பரில் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
உலக வங்கியின் 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி திட்டத்தின் கீழ் 132,500 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இலங்கை பெறவுள்ளது.
உர பிரச்சினையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அடுத்த சிறு போகத்திற்குள் தீர்வு காண முடியும். டொலர் நெருக்கடியால் செய்கைக்கான உரக் கொள்முதல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. டொலர் நெருக்கடியால் உரம் இறக்குமதி 20 சதவீதம் வரை குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் நெற் செய்கைக்கு மாத்திரமே அரசாங்கம் இரசாயன உரத்தை இறக்குமதி செய்கிறது. ஏனைய பயிர்களுக்கு உரம், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் அனைத்தும் தனியாரால் இறக்குமதி செய்யப்படுகிறது. டொலர் நெருக்கடி இந்த நிறுவனங்களின் செயற்பாடு மற்றும் இறக்குமதி செயல்முறையை பாதித்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உரப்பிரச்சினை காரணமாக உள்ளூர் மக்காச்சோளச் செய்கை 15 வீதமாகக் குறைந்துள்ளதாகவும் இதனால் கால்நடை தீவனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.
எனவே, அவர்கள் விலங்குகளின் உணவுக்காக சோளத்தை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது.
மக்காச்சோளம் அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டது அதே சமயம் கோழி மற்றும் முட்டையின் விலையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. உள்ளூர் உணவு உற்பத்தியை அதிகரிப்பதுதான் உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க உதவும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.