
கொழும்பு, ஒக் 22
மெக்சிகோவுக்கான இலங்கை தூதுவராக மஹிந்த சமரசிங்க நற்சான்றிதழ் கையளிப்பு
மெக்சிகோவுக்கான இலங்கைத் தூதுவராக மகிந்த சமரசிங்க தனது நற்சான்றிதழ் கடிதத்தின் பிரதிகளை அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ தூதுவரிடம் சமர்ப்பித்துள்ளார்.
19 ஆம் திகதி வொஷிங்டன் டி.சி.யில் உள்ள மெக்சிகோ கலாசார நிலையத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின் போது தூதுவர் மஹிந்த சமரசிங்க இந்த நற்சான்றிதழ்களை வழங்கினார்.
நற்சான்றிதழ்களை சமர்ப்பித்ததன் பின்னர் இடம்பெற்ற சந்திப்பில் கருத்துத் தெரிவித்த தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலனுக்காக இரு தரப்பு உறவுகளை உயர் மட்டத்திற்கு கொண்டு வர கடுமையாக உழைக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இலங்கையுடன் சாதகமான வர்த்தக சமநிலையுடன் மெக்சிகோ தற்போது இலங்கை உற்பத்திகளுக்கான 15வது ஏற்றுமதி நாடாக மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் தூதுவர் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் அது தொடர்பான பிரதிகூலங்கள் குறித்து விளக்கிய தூதுவர் மகிந்த சமரசிங்க, மெக்சிகோ உள்ளிட்ட நம்பகமான இருதரப்பு மற்றும் சர்வதேச பங்காளிகளின் ஆதரவுடன் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் மெக்சிகோ அங்கத்துவம் பெற்றுள்ளதால், இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான அண்மைய முன்னேற்றங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மெக்சிகோ தூதுவருக்கு மகிந்த சமரசிங்க தெளிவுபடுத்தினார்.
தூதுவர் சமரசிங்க மெக்சிகோ ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பிப்பதற்கான உத்தியோகபூர்வ வைபவமொன்று விரைவில் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக மெக்சிகோ தூதுவர் எஸ்டெபான் மொக்டேசுமா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மெக்சிகோவுக்கான இலங்கை தூதுவர் என்ற வகையில் சுதந்திரமாக தனது கடமைகளை மேற்கொள்ள முடியும் என தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வலுவான விநியோகச் சங்கிலியைக் கொண்ட மெக்சிகோ, அமெரிக்காவுடனும் பிராந்தியத்தில் உள்ள பல முக்கிய நாடுகளுடனும் வலுவான பொருளாதாரப் பங்காளித்துவத்தைப் பேணுவதாகத் தெரிவித்த அவர், பிராந்தியத்தில் தனது இருப்பை விரிவுபடுத்துவதற்கு மெக்சிகோவின் இருதரப்பு மற்றும் பலதரப்பு வர்த்தக துறைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மெக்சிகோ தூதுவர் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.