
நாட்டில் கடந்த சில மாதங்களாக அரசியலில் பல்வேறு பட்ட மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக பல்வேறு அரசியற் கட்சிகளும் அடுத்த தேர்தலை மையமாகக் கொண்டு தமது அரசியற் காய்நகர்த்தல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் ராஜபக்சக்களின் அரசியற் கூடாரமாக விளங்கும் பொதுஜன பெரமுன கட்சியில் உள்ள முக்கிய சில புள்ளிகள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதியதொரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என தெரியவருகின்றது.
இதற்கான பேச்சுகள் வெற்றியை நோக்கி நகர்வதாகவும், ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்கவின் மத்தியஸ்தத்துடனேயே பேச்சுகள் தொடர்வதாகவும் சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சிசபைத் தேர்தலில் இக்கூட்டணி போட்டியிடும் எனவும், ‘அன்னம்’ புதிய கூட்டணியின் சின்னமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கண்டி, கம்பஹா, காலி, பொலன்னறுவை, பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் இக்கூட்டணியில் இணையவுள்ளனர்.
அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய புள்ளிகளுள் ஒருவரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், விரைவில் தீர்க்கமானதொரு அரசியல் முடிவொன்றை எடுக்கவுள்ளார் என அறியமுடிகின்றது.
இவ்வாரான நிலையில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்பதாக பல்வேறு அரசியற் திருப்பங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.