மஹேலவின் பரிந்துரைக்கு அமைய அவுஸ்ரேலியா விரையும் மூன்று இலங்கை வீரர்கள்!

அவுஸ்ரேலியாவில் நடைபெறும் ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இணைவதற்காக, மூன்று வீரர்களை அனுப்பவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் அசித்த பெர்னாண்டோ மற்றும் மதீஷா பத்திரன ஆகியோரை உயர் செயல்திறன் தலைவரான டிம் மெக்காஸ்கிலுடன் அவுஸ்ரேலியாவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கு செல்லும் அவர், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியில், பிரதான அணி வீரர்கள் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

இதில், டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், பிரமோத் மதுஷான் மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் சிறு காயங்களுடன் தற்போது அணியில் உள்ளனர்.

மூன்று வீரர்கள் வரவழைக்கப்பட்டது குறித்து இலங்கையின் ஆலோசகர் பயிற்றுவிப்பாளர் மஹேல ஜெயவர்தன கூறுகையில்,

‘மேலும் வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் அவர்களுக்கு மாற்று வீரர்கள் தேவைப்படுவார்கள், ஆகையால், மாற்று வீரர்களைச் செய்வது எளிதாக இருக்கும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.

குழு 1இல் இடம்பிடித்துள்ள இலங்கை அணி, தனது முதல் சுப்பர்-12 சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், இலங்கை அணி, நடப்பு சம்பியன் அவுஸ்ரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *