
இன்று இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடும் நிலையில், இந்தியா மீது முன் வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு ஒன்று சர்வதேச நாடுகளின் முன் பொய் என நிரூபிக்கப்பட்ட வெற்றிச் செய்தி ஒன்று இந்த ஆய்வில் பார்க்கப்பட உள்ளது.
குறிப்பாக இந்தியாவின் சமயக் கொள்கைகள் மற்றும் இந்திய மக்களின் சகோதரத்துவம் தொடர்பாக பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்த போலி குற்றச்சாட்டு மற்றும் அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக கூறி வந்த வதந்திகள் அனைத்தும் இந்த நல்ல நாளில், தவிடுபொடியாகும்படியான தகுந்த பதில் சர்வதேச நாடுகளிடம் இருந்தே கிடைத்துள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் அமெரிக்கா, அதன் பிரஜைகளை இந்தியாவிற்கு செல்வதற்கு முன் எச்சரிக்கையாக இருக்குமாறும், எல்லைப்பகுதியில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் பாகிஸ்தான்- இந்தியா எல்லை பிரதேசத்தில் உள்ள பத்து கிலோமீட்டருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் குறிப்பிட்டு இருந்தது.
அதுமாத்திரமன்றி பாகிஸ்தானிற்கு பயணம் செய்த பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதுவர், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பிரதேசத்தை விடுதலை அடைந்த காஷ்மீர் என azad காஷ்மீர் என்று கூறி இருந்தமை இந்திய தரப்பில் பலத்த ஆத்திரத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இதற்கு அமெரிக்காவிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வழங்கப்படவில்லை.
அடுத்து பாக்கிஸ்தான் அதன் பங்கிற்கு, அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், “இந்தியாவில் முஸ்லிம்கள் சரிசமமாக நடத்தப்படவில்லை எனவும் அவர்களது மனித உரிமைகள் மீறப்படுகின்றன” எனவும் போலி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தது.
இதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஏற்கனவே மறுப்பு தெரிவித்து இருந்ததோடு, இந்திய உள்துறை அமைச்சரும், காஷ்மீர் பயணம் செய்தபோது பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாகிஸ்தானிற்கு எமது நிலையை விளங்கப்படுத்த வேண்டிய தேவை இல்லை. காஷ்மீர் மக்களை பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும் காஷ்மீர் மக்களுடன் மாத்திரமே நாம் உரையாட வேண்டியுள்ளது என கூறியிருந்தார்.
“காஷ்மீருக்கு வந்து பார்க்கும்போது, உண்மையில் காஷ்மீர் எவ்வளவு சமாதானத்துடனும் முன்னேற்றத்துடன் இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன். இங்கே உலக நாடுகளை சேர்ந்த மக்கள் வருகை தந்து தமது சுற்றுலாவை கழிப்பதைக் காணும் போது மகிழ்ச்சி அளிக்கிறது” அமெரிக்கா பாக்கிஸ்தான் கூற்றிற்கு நேரடி பதில் போல இருக்கும் இந்த வசனம், இந்தியாவை சேர்ந்த யாரும் கூறிய விடயமல்ல. நேற்றைய தினம் ஈரான் நாட்டின் தூதுவர் காஷ்மீரைப் பற்றிக் கூறியது.
நேற்று, காஷ்மீரில் ஈரான் இந்தியா இடையே கலாச்சாரத் தொடர்புகளை அதிகரிக்கும் நோக்கத்தில் காஷ்மீர் மக்கள் நீதி மையம் ஒழுங்கமைத்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ஈரான் கலாச்சார அமைப்பிற்கான இந்திய தூதுவர் முஹம்மத் அலி ரபாணி, மேற்குறிப்பிட்ட வசனத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடும்போது ஈரான் மக்கள் கஷ்மீருக்கு வரவேண்டும் எனவும் இங்குள்ள மக்களின் அந்நியோன்யத்தையும், பிரதேசத்தில் அழகையும் கண்டு களிக்க வேண்டும் எனவும் தான் பெரிதும் விரும்புவதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த கூட்டத்தின்போது, ஈரான் இந்தியா இடையே உள்ள இடைத் தொடர்புகள் தொடர்பாக உரையாற்றிய அவர், ஆரம்ப காலத்தில் இருந்தே ஈரான் இந்தியாவிற்கு சிறந்த நட்பு நாடாக இருந்துள்ளது. இனிவரும் காலத்திலும் இந்த நட்புறவு தொடரும் என்பதை உறுதியாக கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்கு மாத்திரமன்றி பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி கொடுக்கும் விதத்தில் அடுத்த முக்கிய கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார் ஈரான் தூதுவர். ரப்பானி இந்தியாவின் சமய நிலைமை தொடர்பாக குறிப்பிடும் போது, காஷ்மீரில் ஷியா முஸ்லிம்கள் சமாதானத்துடன் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. சில நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நேரடியாகவே புலப்படும் விதத்தில் உள்ளன.
ஆனால் இந்தியாவில் அவ்வாறு அல்ல. இங்கே இந்துக்களும் பிராமணர்களும் முஸ்லிம்களது விழாக்களில் கலந்து கொள்வதை நான் காண்கிறேன். இது மிகவும் அரிதான இடங்களிலேயே நடக்கும் விடயம். இந்தியாவில் சியா முஸ்லிம்கள், சுனி முஸ்லிம்கள் சீக்கியர்கள், இந்துக்கள் இடையே எந்த ஒரு பாகுபாட்டையும் காணவில்லை.
அவர்கள் சகோதரத்துடன் வாழ்வதற்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது அவர்களது நடவடிக்கைகள் மூலம் தெளிவாக தெரிகிறது. உண்மையான சமய ரீதியான ஒற்றுமை என்பது இதுதான். இங்கே மக்கள் புரிந்துணர்வுடன் சமயம் தாண்டிய மனிதாபிமான ஒற்றுமையுடன் பழகுவதை என்னால் முழுதும் உணர முடிகிறது, என இந்தியாவை வெகுவாக மீண்டும் மீண்டும் புகழ்ந்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தார்.
இதற்கு மேலாக காஷ்மீரில் மக்களுக்கு கல்வியறிவு மற்றும் இலக்கியம் தொடர்பான அறிவுகளை புகட்டுவதற்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் கலாச்சாரம், இலக்கியம் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதையும் அவதானிக்க முடிகிறது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
அது மாத்திரமன்றி, காஷ்மீருக்கு வருவதற்கும், இங்குள்ள மக்களுடன் பழகுவதற்கும் அவர்களது அந்நியோன்யத்தையும் சகோதரத்துவத்தையும் கண்கூடாக காண்பதற்கும் உண்மையில் கடவுள் எனக்கு கிருபை அளித்துள்ளார்.
என்னை இந்த கூட்டத்திற்கு அழைத்ததற்காகக ஜம்மு காஷ்மீர் பிரதேசத்திற்கான மக்கள் நீதி மையத்தின் தலைவர் Agha Syed Abbas Rizvi அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என கூறியிருந்தார்.
அடுத்து கூட்டத்தில் உரையாற்றிய ஜம்மு காஷ்மீர் பிரதேசத்திற்கான மக்கள் நீதி மையத்தின் தலைவர் Agha Syed Abbas Rizvi உரையாற்றும் போது, காஷ்மீரில் வாழும் முஸ்லிம் மக்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள். வேறு நாடுகளில் மக்கள் படும் துயரத்தை அவதானிக்கும்போது காஷ்மீரில், முஸ்லீம் மக்களுக்கு கிடைக்கும் மத சுதந்திரம் வேறு நாடுகளில் கிடைப்பதில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இங்கே இந்துக்களும் முஸ்லிம்களும் சீக்கியர்களும் சகோதரத்துவத்துடனும் வாழ்கிறார்கள் என கூறியுள்ளார்.
சர்வதேச அரங்கில் இந்தியாவை அவமானப்படுத்துவதற்காக குற்றச்சாட்டுகளுடன் பாகிஸ்தான் பல தடவைகள் முயற்சி செய்து வந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், வாக்குவாதத்தில் இறங்காமல் பொறுமை காத்த இந்தியாவின் மேன்மை தற்போது தானாகவே உலகநடுகளுக்கு தெரியும் விதத்தில்
வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பிற செய்திகள்