
நாட்டில் விற்பனை செய்யப்படும் பாணின் விலை, நிறை மற்றும் தரம் ஆகியவற்றை குறிப்பிடும் வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகார சபை உடன் வெளியிட வேண்டும்.
மேலும் பாணின் விலை, நிறை தொடர்பாக மேற்கொள்ளப்படும் தற்போதைய சுற்றிவளைப்புகள் தொடர்பில் நுகர்வோர் மற்றும் வர்த்தகளுக்குக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களில் வெளிக்கொணருவதை வர்த்தக அமைச்சு மற்றும் நுகர்வோர் விவகார சபை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.
நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தொடர்பில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
விற்பனை செய்யப்படும் பாணின் விலை, நிறை, தரம் போன்றவற்றில் நுகர்வோர்களுக்கு பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில வருடங்களாக நுகர்வோர் அதிகார சபைக்கு இது தொடர்பில் பல முறைப்பாடுகளை செய்திருந்தோம்.
எவ்வாறாயினும் 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டம், சட்ட நடவடிக்கைகளுக்கு இடமளிக்காத காரணத்தினால் நுகர்வோர் அதிகார சபை இது தொடர்பில் எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இருப்பினும் நுகர்வோர் விவகார அதிகார சபை தற்போது நாடளாவிய ரீதியில் பாண் விற்பனை தொடர்பில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளது.
மேலும் குறைந்த நிறை கொண்ட பாண் மற்றும் அதன் தரம் தொடர்பில் பரவலாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் காண்பிக்கப்படுகிறது.
இந்நிலையில் பாண் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை, நிறை மற்றும் தரம் ஆகியவற்றை குறிப்பிடும் வர்த்தமானியை வெளியிடுமாறு நுகர்வோர் என்ற வகையில் கேட்டுக்கொள்கிறோம். மேலும் அதற்கான அதிகாரம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு உள்ளது.
இருப்பினும் வர்த்தமானியை வெளியிடுவதை தவிர்த்து நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களில் காட்சியளிப்பதை வர்த்தக அமைச்சு மற்றும் நுகர்வோர் விவகார சபை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்