22வது திருத்தச்சட்டத்திற்கு வாக்களிக்காத எம்.பிக்கள் யார்?

22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் மீதான வாக்கெடுப்பின் போது அதில் கலந்துக்கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை விபரங்களை வழங்குமாறு பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, நாடாளுமன்றத்தின் தகவல் அதிகாரியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் அரசியல் பதவிகளை வகிக்கும் உரிமையை இரத்துச் செய்தல், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புத்துயிர் ஊட்டுதல் உட்பட பல முக்கிய விடயங்கள் அடங்கிய 22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

திருத்தச்சட்டம் மீதான வாக்கெடுப்பில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவில்லை. 22வது திருத்தச்சட்டம் தாய் நாட்டுக்கு மிக முக்கியமான திருத்தச்சட்டம் என்பதால், அதற்கு ஆதரவளிக்காது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தவிர்த்தார் எனில், அவருக்கு தாய் நாட்டின் மீதுள்ள சார்பு நிலை தொடர்பில் கேள்வி எழுவதாக உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பான வாக்கெடுப்பில் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவில்லை ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருத்தச்சட்டம் சம்பந்தப்பட்ட வாக்கெடுப்பு நடத்தப்பட்ட தினத்தில் தம்மால் நாடாளுமன்றத்திற்கு வர முடியாமல் போனதற்கான காரணத்தை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியது அவர்களின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.

2016 இலக்கம் 12 தகவல் அறியும் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அந்த தகவல்களை மிக விரைவில் வழங்குமாறும் உதய கம்மன்பில தனது கடிதத்தில் கேட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *