தமிழ் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் உரையாடல்! மனோ வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி மாளிகையில் நடந்த தீபாவளி நிகழ்வில் நானும், அமைச்சர் டக்ளஸ் தேவாவும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றியும், கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் ஜனாதிபதியுடன் உரையாடினோம் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளது:

ஜனாதிபதி மாளிகையில் நடந்த தீபாவளி நிகழ்வில், தீபாவளியை தவிர ஏனையவற்றை பற்றி உரையாடல் நிகழ்ந்துள்ளது.

நானும், அமைச்சர் டக்ளஸ் தேவாவும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றியும், கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் ஜனாதிபதியுடன் உரையாடினோம்.

பொலிஸ் பதிவு பற்றி மீண்டும் ஒருமுறை பொலிஸ் மா அதிபருக்கு பணிப்பதாக ஜனாதிபதி சொன்னார்எனப் பதிவிட்டுள்ளார்.

இந்துக்களின் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் சிறப்பு தீபாவளி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் (24.10.2022) நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் இந்து மத சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்ததுடன் நிகழ்வு மிகவும் எளிமையாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மனுஷ நாணயக்கார, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான அகில விராஜ் காரியவசம், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, அனோமா கமகே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜா, கொழும்பு பிரதி மேயர் எம்.இக்பால், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான ஜெயராஜ் விஷ்ணுராஜ், கனகரஞ்சிதன் பிரணவன், துமிந்த ஆட்டிகல, ஐக்கிய லக்வணிதா முன்னணி தலைவி சாந்தினி கோங்கஹகே, ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *