அமெரிக்காவில் உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் உட்பட மூவர் உயிரிழப்பு: 7பேர் காயம்!

அமெரிக்காவின் மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேக நபர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர்.

நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி 09:00 மணிக்கு சென்ட்ரல் விஷுவல் அண்ட் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் உயர்நிலைப் பாடசாலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

பாடசாலைக் கட்டடத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபர் எப்படி உள்ளே நுழைந்தார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.

துப்பாக்கிதாரியின் ஆயுதம், தாக்குதலின் இடைநடுவே செயலிழந்ததால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக சாட்சிகள் கூறுகின்றனர்.

தாக்குதல்தாரி 19 வயதுடைய முன்னாள் மாணவர் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், பொலிஸாருடன் துப்பாக்கிச் சூடு நடத்தி, பொலிஸாரின் பதில் தாக்குதலால் காயமடைந்த பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சுமார் 400 மாணவர்களைக் கொண்ட பாடசாலையில் அவர் நடத்திய தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக இல்லை.

ஒரு பதின்ம வயது பெண் பாடசாலைக்குள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, ஒரு பெண் மருத்துவமனையில் இறந்தார் என்று பொலிஸார் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

காயமடைந்த ஏழு பேரில் மூன்று பெண்கள் மற்றும் நான்கு சிறுவர்கள் அடங்குவதாகவும், எவருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *