
பாராளுமன்ற உறுப்பினர்களை பொம்மைகளைப் போன்று ஆட்டி வைக்கும் யுகம் நிறைவுக்கு வந்துள்ளது. பஸில் ராஜபக்ஷவின் சகாக்களைக் கொண்டு , அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி அவரை முழுமையாக பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றியுள்ளதாக பிவிதுரு ஹெலஉருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் (23) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் விரைவில் கிடைக்கப்பெறும் என்று அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குனர்களிடம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த பின்னரே தம்மால் உதவ முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த போது சீனா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைசாத்திடுமாறு கோருகிறது.
இந்தியா எக்டா ஒப்பந்தத்தைக் கோருகிறது. கடன் நெருக்கடிகளைக் குறைப்பதற்கு கடன் பெறுவது தீர்வாகாது என்பதை அரசாங்கம் உணர வேண்டும். அரசாங்கம் இப்போதும் தவறான பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது.
கடன் பெறுவதற்கு பதிலாக முதலீடுகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் அதற்கு முயற்சிக்காது. காரணம் முதலீடுகளில் இலஞ்சம் பெற முடியாது என்பதனாலாகும். இன்று நாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளைப் போன்றே அன்று ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தன.
ஆனால் அவை நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு கடன் பெறவில்லை. மாறாக உற்பத்தி பொருளாதாரத்தில் அவதானம் செலுத்தின. அவற்றில் வெற்றியும் பெற்றன. எனவே இலங்கை கடன் பெறுவதைத் தவிர்த்து உற்பத்தியில் அவதானம் செலுத்தும் வரை ஒருபோதும் முன்னேறாது. 7 மூளைகளைக் கொண்டவர் என சித்தரிக்கப்பட்ட பஷில் ராஜபக்ஷவிடம் நாட்டின் நிதி நிர்வாகம் கையளிக்கப்பட்ட போது நாடு வீழ்ச்சியடைப் போகிறது என்று நாம் எச்சரித்தோம்.
அன்றிலிருந்து பஷில் ராஜபக்ஷவை மீண்டும் அமெரிக்காவிற்கு அனுப்பும் வரை தொடர்ந்தும் போராடிக் கொண்டிருப்போம் என்று கூறியதை இன்று நிறைவேற்றியுள்ளோம். கடந்த வெள்ளியன்று அவரது சகாக்களைக் கொண்டே 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றி, பாராளுமன்றத்திலிருந்து முற்றாக பஷில் ராஜபக்ஷவை வெளியேற்றியுள்ளோம்.
எனவே தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களை பொம்மைகளைப் போன்று ஆட்டி வைக்கும் யுகம் நிறைவிற்கு வந்துள்ளது. அத்தோடு காகத்தின் அரசியல் யுகமும் நிறைவுக்கு வந்துள்ளது. தற்போது காகத்தின் குறைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் யுகத்தையும் நிறைவுக்கு கொண்டு வந்து, முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றார்.
பிற செய்திகள்