திருக்கோணேஸ்வரர் ஆலய சூழல் புனித பிரதேசமாகப் பிரகடனம் – காரைதீவு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய சூழலை பௌத்த மயமாக்கும் சதித்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆகவே உடனே அதனைத் தடுத்து நிறுத்தி அந்த பிரதேசத்தைப் புனித   பிரதேசமாக மாற்றுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கும் பிரேரணையொன்று இன்றைய தினம் காரைதீவு பிரதேசசபை அமர்வில் நிறைவேற்றப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களால் கொண்டுவரப்பட்ட இப்பிரேரணையானது சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

காரைதீவு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்றைய தினம் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது. இதன் போது தவிசாளர் ஜெயசிறில் அவர்களால் இந்த தீர்மானம் பிரேரணையாக முன்மொழியப்பட்டது.

இது தொடர்பில் அவர் தனது முன்மொழிவில் தெரிவிக்கையில்,

இலங்கையின் மிக தொன்மை வாய்ந்த பாடல் பெற்ற தலமாக விளங்கும் திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் சைவத்தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்று நிலம். அந்த ஆலயம் சூழ்ந்த இடங்களில் சட்டவிரோதமாகக் கடைகள் அமைக்கப்பட்டும், தொல்லியல் திணைக்களத்தினால் சில தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டும் வருவது ஒட்டுமொத்த இந்துக்களின் மனங்களை வேதனை அடைய வைத்திருக்கின்றது.

தொல்பொருள் திணைக்களம் ஒரு ஆலய விடயத்திற்குள் தலையிடுகின்றது என்றால், நிச்சயம் அங்கு ஒரு இரகசிய வேலைத்திட்டமிருக்கும். இந்த பின்புலத்தை நோக்கினால், திருகோணேஸ்வர ஆலயத்தை உள்ளடக்கியவாறு, உல்லாசத்துறை அபிவிருத்தியென்னும் பெயரில் தொல்பொருள் திணைக்களம் நுழைவதானது, நீண்டகால அடிப்படையில் கோணேசர் ஆலயத்தை விழுங்கும் ஒரு செயற்பாடுதான்.

ஏனெனில் உல்லாசத்துறை அபிவிருத்தியை செய்வதற்கு பல்வேறு இடங்கள் இருக்கின்ற போது, குறிப்பாக கோணேசர் ஆலயப்பகுதியை தெரிவுசெய்ய வேண்டிய அவசியமென்ன? எனவே அங்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படவேண்டும்.

கோணேசர் கோயிலில் திட்டமிட்டு நிறுவப்படும் பௌத்த மயமாக்கல் சிங்கள குடியேற்றங்கள் என்பனவற்றை தடுத்து ஆலய வளாகத்தை சூழ உள்ள பிரதேசங்களை புனித பிரதேசமாக்க அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சபையில் ஏகமதாக நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தவிசாளர் இதன் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *