
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுடை பகுதியில் 20 மில்லிகிராம் உயிர்கொல்லி ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளை ஞரே இவ்வாறு நேற்று கைதுசெய்யப்பட்டார்.
மானிப்பாய் – கட்டுடைப் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இளைஞர்களை சோதனையிட முயன்றவேளை இளைஞர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.
அந்த இளைஞரை மடக்கிப்பிடித்து சோதனையிட்ட போது அவரிடமிருந்து 20 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெரோய்ன் போதைப்பொருளை கொள்வனவு செய்வதற்காக தெல்லிப்பழையிலிருந்து சைக்கிளில் வந்தார் என்று சந்தேகநபர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.