ஒரு பிரதேசத்தின் வளர்ச்சி இளைஞர்களிடமே இருக்கின்றது – கலையரசன் தெரிவிப்பு!

அரசாங்கம் தற்போதிருக்கின்ற நிலையில் அபிவிருத்தியை முன்னெடுக்கும் எந்த ஏற்பாடுகளும் இல்லை. எமது பிரதேசத்தில் தற்போது ஏற்பட்டு வருகின்ற கல்வி, விளையாட்டு ரீதியான முன்னேற்றகரமான செயற்பாடுகளை மேலும் முன்னேற்றுவதற்குரிய வழிவகைகளை முன்னெடுக்க வேண்டும். ஒரு பிரதேசத்தின் வளர்ச்சி இளைஞர்களிடமே இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

மத்திய முகாம் பிளையிங் போல் விளையாட்டுக் கழகத்தின் 39வது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாவிதன்வெளி பிரதேசசபைக்குட்பட்ட பிரதேசங்கள் ஒரு குறுகிய காலத்தில் இருந்தே அபிவிருத்தியைக் கண்டு வருகின்றது. இங்கு கல்வி, விளையாட்டு போன்றவற்றில் தற்போது படிப்படியான வளர்ச்சிகளை இப்பிரதசம் காண்கிறது.

அதற்கு ஒத்துழைப்பாக எமது பிரதேச இளைஞர்களும், கல்வியாளர்களும், அரசியல் பிரமுகர்களும் செயற்படுகின்றார்கள். உண்மையிலே ஒரு பிரதேசத்தின் வளர்;ச்சி இளைஞர்களிடமே இருக்கின்றது என்பதை இப்பிரதேச இளைஞர்கள் நிரூபித்து வருகின்றார்கள்.

விளையாட்டு என்ற ரீதியில் எமது பிரதேசத்திலே எமக்கான ஒரு பொது விளையாட்டு மைதானம் சகல வசதிகளுடனும் இல்லை என்பது ஒரு மனவேதனையான விடயமே.

நாங்களும் நீண்டகால அரசியலில் இருந்தலும் தமிழர்கள் என்ற காரணத்தினால் இந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாக எங்களை, எமது பிரதேசங்களைப் புறக்கணிப்பு செய்திருக்கின்றது. ஆனால், நாங்கள் சில அரச சார்பற்ற நிறவனங்களை அணுகி பல வேலைத்திட்டங்களை இந்தப் பிரதேசத்திலே முன்னெடுத்திருக்கின்றோம்.

தற்போது இந்த அரசாங்கம் இருக்கின்ற சூழ்நிலையிலே அபிவிருத்தியை முன்னெடுக்கக் கூடிய எந்த ஏற்பாடுகளும் இல்லை. வட்டார ரீதியாக பிரதேசசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் கூட தற்போது இல்லை, அதுமட்டுமல்லாது பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு வழங்குவதற்கென ஒதுக்கப்பட்ட நிதியும் இல்லாமல் செய்துள்ளார்கள்.

இது தான் இந்த நாட்டின் நிலைமை. இந்நிலையில் 2023ம் ஆண்டு எவ்வாறான சூழல் உருவாகும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் நாம் நாட்டின் நிலைமையை எண்ணி இருக்காமல் தற்போது எமது பிரதேசத்தில் ஏற்பட்டு வருகின்ற கல்வி, விளையாட்டு ரீதியான முன்னேற்றகரமான செயற்பாடுகளை மேலும் மேலும் முன்னேற்றுவதற்குரிய வழிவகைகளை முன்னெடுக்க வேண்டும்.

தற்போது எமது பிரதேசத்தில் கல்விப் பெறுபேறுகள் மிகவும் முன்நோக்கி வருகின்ற நிலைமையை அவதானிக்க முடிகின்றது. அதே போன்றே விளையாட்டுகளிலும் மாகாண ரீதியிலான முன்நகர்வுகளும் இடம்பெற்றிருக்கின்றன. இவை மேலும் உயர்நிலையை அடைய வேண்டும்.

எனவே நாங்கள் எமது மக்களுக்காக என்றும் ஒன்றுபட்டுச் செயற்படுவோம். எமது உரிமை சார்ந்த அரசியலை முன்னெடுப்போம். அதேவேளை எமது பிரதேசங்களையும் முன்னேற்றுவோம் என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *