உள்ளுராட்சி தேர்தலுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மாகாணசபைத் தேர்தலுக்கும் அளிக்கப்படவேண்டும்- சுரேஷ் வலியுறுத்து!

உள்ளுராட்சி தேர்தல்களை உடனடியாக நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கூட்டாக செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றினை கடந்த 20.10.2022அன்று ஏற்படுத்திக்கொண்டுள்ளன.

நாட்டில் அனைத்து ஜனநாயக நடவடிக்கைகளும் தொய்வின்றி தொடரவேண்டும் என்பதில் எமக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை அனைத்து மாகாணசபைகளும் தமது பதவிக்காலத்தை முடித்து சுமார் நான்கு வருடங்களாகியுள்ள நிலையில் மாகாண மக்களின் பிரதிநிதித்துவத்துடனான மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் உரிய நேரத்தில் நடத்தப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகின்றது.

அவற்றுக்கான தேர்தல்களை நடத்துவதற்கும் இந்தக் கட்சிகள் குரல்கொடுக்க முன்வரவேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டே மாகாணசபை முறைமைகள் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த மாகாணசபைகளை தென்னிலங்கையின் ஆளும் கட்சியினரோ அல்லது எதிர்க்கட்சியினரோ விரும்பவில்லை.

இதன் காரணமாகத்தான் அதிகாரப்பகிர்விலோ அல்லது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதிலோ அக்கறையின்றி இருக்கின்றார்கள். இதன் காரணமாகத்தான் மாகாணசபைகளின் பதவிக்காலம் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்த பின்னரும் மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடாத்தும்படி சிங்கள அரசியல் தலைமைகளிடமிருந்து யாரும் குரல்கொடுக்க முன்வரவில்லை.

இப்பொழுது உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை காலகதியில் நடாத்தப்படவேண்டுமென்று பல்வேறுபட்ட எதிர்க்கட்சிகளும் கூட்டாக முடிவெடுக்கின்றன. நாட்டில் ஜனநாயகம் தழைப்பதற்கு உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடாத்தப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் இதே வேகத்தில் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்தும்படி ஏன் இவர்கள் கோரவில்லை? அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னராக நடக்க வேண்டிய உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை அரசாங்கம் பிற்போடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் எதிர்க்கட்சிகள், நான்கு வருடங்கள் கடந்தும் மாகாணசபைகளுக்கான தேர்தல் வைக்கப்படாமை குறித்துப் பேசாமல் இருப்பது வருத்தத்திற்குரியது.

வடக்கு-கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில், அதிகாரிகளும் ஆளுனர்களும் தாம் விரும்பியவாறு செயற்படக்கூடிய ஒரு போக்கினைக் காணக்கூடியதாக இருக்கின்றது. மாகாணத்திற்கான மக்கள் பிரதிநிதிகள் இன்மையால், எமது மாகாண நிலங்களை பல்வேறுபட்ட தரப்புகளும் தாம் விரும்பியவாறு பங்கிட்டுக்கொள்ளக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மாகாணத்தின் தொன்மையான, புராதனமான இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றது. மாகாணத்திற்குரித்தான வேலை வாய்ப்புகள் அனைத்தும் மாகாணத்திற்கு வெளியில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

மாகாணசபையினூடாகச் செய்ய வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் அதிகாரிகளினால் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் பல்வேறுபட்ட குழப்பங்கள் உருவாகின்றன. ஆகவே, வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு மாகாணசபைத் தேர்தல் என்பது அவசியமானதும் முதன்மையானதுமாகும்.
கடந்த காலங்களில் தவறுகள் விடப்பட்டுள்ளன என்றும் கடந்தகால தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சிங்களத் தலைவர்கள் தற்பொழுது அடிக்கடி பேசுவதைக் கேட்க முடிகின்றது.

இந்த வார்த்தைகள் உண்மையில் அவர்களது இதயத்திலிருந்து வந்தவையாக இருந்தால், குறைந்தபட்சம் அவர்கள் அனைவரும் இணைந்து வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவதற்குக் குரல்கொடுக்க முன்வரவேண்டும்.

மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடாத்துவதற்கு சட்டம் ஒரு பிரச்சினையாக இருக்குமாக இருந்தால், மாகாணங்களுக்கான புதிய எல்லை மீள்நிர்ணயத்தை நிறுத்தி வைத்து, நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் புதிய சட்டத்தை நிறைவேற்றுவதன் ஊடாக பழைய முறையில் தேர்தலை நடாத்த முடியும்.

ஆகவே, குறைந்தபட்சம் வடக்கு-கிழக்கில் மாத்திரமல்லாமல் மலையகத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்தும்படி குரல்கொடுக்க வேண்டும்.

நடந்து முடிந்த ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில், பதின்மூன்றாவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் மாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்றும் இந்தியா சுட்டிக்காட்டியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வடக்கு-கிழக்கு மாகாணசபைகள் உருவாக்கப்பட்டால் மாத்திரமே இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு தமிழ்ப்பேசும் மக்கள் தங்களாலான பங்களிப்புகளை வழங்க முடியும்.

கொழும்பை நம்பி யாரும் முதலீடு செய்ய வரமாட்டார்கள். ஆகவே, இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்று உண்மையிலேயே அரசாங்கமோ எதிர்க்கட்சிகளோ விரும்பினால் அர்த்தபுஷ்டியான அதிகாரப் பகிர்வுடன் மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்படவேண்டும்.

எல்லா மாகாணங்களிலும் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவது கடினமென அரசாங்கம் கருதினால், முதற்கட்டமாக வடக்கு-கிழக்கு மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடாத்தலாம். இது ஒன்றும் புதிய விடயமல்ல.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபொழுது, தான்விரும்பிய மாகாணங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தேர்தலை நடாத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *