பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த ஆட்டோவொன்று நேற்று (25.10.2022) நடு வீதியில் வைத்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து ஆட்டோவுக்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு நுவரெலியா லவர்ஸ்லிப் பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே, நுவரெலியா பஸ் நிலையத்திற்கு அருகில் இவ்வாறு ஆட்டோ தீப்பற்றி எரிந்துள்ளது.
ஆட்டோ தீப்பற்றி எரிந்த போது அருகில் இருந்தவர்கள் பல வழிகளில் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆட்டோ இவ்வாறு தீப்பற்றி எரிந்த போது, அதற்குள் இருந்த தாய், தந்தை மற்றும் மகளும் பயணித்துக்கொண்டிருந்ததுடன், தந்தையே ஆட்டோவை செலுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த மூவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், இந்த தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.