
இலங்கையில் இவ்வருடம் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 435 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கையில் 521 கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்வாண்டு கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், கொலைகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெறுவதாகவும், தற்போதுள்ள சட்ட நடைமுறைகள் மற்றும் நடைமுறைகளில் விசாரணைகளை நடத்துவது தொடர்பில் பொருத்தமான திருத்தங்களை அடையாளம் காண பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அந்தக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்ய நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்