
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை பகுதியில் தனிமையில் வசித்து வந்த 55 வயது பெண்ணின் 1 1/2 பவுண் சங்கிலி மற்றும் அரைப்பவுண் மோதிரம் என்பவற்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சியை சொந்த இடமாகக் கொண்டவர் எனவும் திருமணம் செய்த நிலையில் தற்போது தெல்லிப்பழை பகுதியில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒன்றரை மாதத்திற்கு முதல் குறித்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில், பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் சந்தேகநபர் தலைமறைவாகி இருந்ததனால் அவரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இச்சம்பவமானது காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனடிப்படையில் காங்கேசன்துறை பிராந்திய புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைவாக, காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த கைது நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
குறித்த நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தினை திருகி, சத்தமிட முடியாதவாறு வாயில் துணிகளை அடைந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபருக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கொலை வழக்கு உள்ளதாகவும், அவர் மேலும் பல திருட்டுக்களுடன் தொடர்புடையவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்