வவுனியாவை உலுக்கிய போதைப்பொருள் வியாபாரமும் அதன் பின்னணியும்!

போதைப்பொருள் பாவனையின் உச்சபயன்பாடு தொடர்பாக அண்மைய நாட்களில் இலங்கையர் மத்தியில் அதிகளவான பேசப்பட்டு வருகின்றது.

பல்வேறு பகுதிகளிலும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுவதும் அதனோடிணைந்து சிலர் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகியுள்ள நிலையில் போதைப்பொருள் வியாபாரத்தினால் கொலைகளும் அரங்கேறி வருவதனை அவதானிக்க முடிகின்றது.

இலங்கை போன்ற கடல் சூழப்பட்ட நாடுகள் அதிகளவில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு உள்ளாகி வருகின்றபோதிலும் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் போதைப்பொருள் தொடர்பான செடிகள் மற்றும் பொருட்கள் உற்பத்திக்கும் பெயர்போயுள்ளன.

இந்நிலையில் அண்மைக்காலத்தில் இலங்கையின் வடபுலத்தில் போதைப்பாவனையாளர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இதனை வளர்ப்பதற்கு எவர்கள் துணை நின்றார்களோ இன்று அவர்களே வெள்ளை உள்ளத்தவர்கள் போன்று சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு போதைப்பாவனையை கட்டுப்படுத்தபோவதாக தெரிவிக்கும் நாடகங்களும் அரங்கேறி வருகின்றது.

ஆய்வுகளின் அடிப்படையில் வடபுலத்தில் யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை வியாபாரம் நடைபெற்று வருவதாகவும் இது எதிர்கால சந்ததியின் தனித்துவம் மற்றும் ஆளுமைக்கு விடுக்கப்படும் சவால் என தெரிவிக்கப்படும் நிலையிலேயே பல போதைப்பொருட்கள் கடல் மார்க்கமாக கொண்டு வரப்படுகின்றபோதும் உள்ளுரில் பயன்படுத்தப்படுகின்றபோது அல்லது பரிமாற்றம் இடம்பெறும் போது கைப்பற்றப்பட்டு வருகின்றது.

கஞ்சா, கெரோயின் போன்ற போதைப்பொருட்களை கடந்து தற்போது ஐஸ் என்ற போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

பணத்தினை இலகுவாக சம்பாதிக்கும் வழிகாட்டியாக எதிர்கால சந்ததியினை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் குழுக்கள் கைது செய்யப்படும் போது தமது வாழ்க்கையை சிறைக்குள் தொலைக்க வேண்டியேற்படும் என்ற சிந்தனையின்றி செய்ற்படுவது வேதனையே.

இதற்குமப்பால் இதனை பயன்படுத்தும் இளம் சமூகம் தமது எதிர்காலம் தொடர்பில் சிந்திக்காமல் தமது கல்வி குடும்பம் என்பனபற்றிய பார்வையின்றி சீரழிவதும் பொறுத்துக்கொள்ளமுடியாததே.
இந்நிலையிலேயே அண்மையில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா போன்ற பகுதிகளில் ‘உயிர்கொல்லி போதை மருந்து விற்பனை’ என்ற தலைப்பில் செய்தியொன்று வெளிவந்தமையினால் நோயாளர்கள் பலரும் தமது நோய்க்கு மருந்து பெறுவதில் தர்மசங்கடத்தினை எதிர்கொண்டுள்ளனர்.

எனவே இது தொடர்பில் சீரான தெளிவினை சுகாதார திணைக்களம் வெளியிட்டிருக்க வேண்டிய கடப்பாடு உள்ளது. எனினும் அதனை தெரிவுபடுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்காத சுகாதார திணைக்களம் உயிர் கொல்லி போதை மாத்திரைகளே விற்பனை செய்யப்பட்டது போன்றதான தோற்றப்பாட்டுடன் குறித்த மாத்திரைகளை விற்பனை முகவரிடம் இருந்து பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்கள் தொடர்ல் விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

எனினும் குறித்த மருந்து உயிர் கொல்லி போதை மாத்திரையா என ஆராய்கின்றபோது அவ்வாறான பிரயோகம் தவறானதாக காணப்படுகின்றது. குறித்த மருந்து ‘பிரிக்கபிலின்’ என்ற வலிநிவாரண மருந்தாக காணப்படுகின்றது.

இது தொடர்பில் மருத்துவர்களோடு கலந்துரையாடும் போது வலி நிவாரணி மருந்தகள் அதிகளவில் பயன்படுத்தப்படும் போது அல்லது தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் போது அது போதையை தரக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எனவே இவ்வாறான வலிநீக்கி மாத்திரை நோயாளர்களுக்கு வழங்கப்படும் போது மருத்துவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்பதே உண்மை என தெரிவித்திருந்தனர்.
இவ்வாறான சூழலிலும் ஒளடதங்கள் தொடர்பாக வர்த்தமானிகளை பரிசீலிக்கின்ற போதும் மருந்து வகைகள் 4 வகையாக பிரிக்கப்படுகின்றன.

இதில் வகுப்பு 1: சாதாரண மருந்துகளாக எவரும் மருந்துவ நிலையங்களில் பெறக்கூடியதாக காணப்படும் (பரசிட்டமோல்) இதற்கு மருத்துவரது பரிந்துரைகள் தேவைப்படுவதில்லை. 

வகுப்பு 2ஏ: மருந்தகங்களில் விற்கப்படும் இதற்கு மருத்துவரின் பற்றுச்சீட்டு கட்டாயமாகாது.(உ10ம்: விட்டமின் மருந்துகள், பூச்சி குளிசைகள், அல்சர் மருந்துகள், கிறீம் வகைகள்) .
வகுப்பு 2பி: மருத்துவர்களின் பரிந்துரைக்கு மாத்திரமே வழங்கப்படும் மருந்து வகைகள். குறித்த மருந்துகளை நோயாளருக்கு வழங்கவதற்கு மருத்துவருக்கு கட்டுப்பாடுகள் இல்லை.

எனினும் சரியான முறையில் நோயாளருக்கு வழங்கப்பட்டதா என்பதனை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புள்ளபோதிலும் அதற்கான பதிவுகள் எதுவும் செய்யப்படவேண்டிய தேவை இல்லை.
வகுப்பு 3: அபாயகரமான மருந்துகளாக காணப்படும்.

இதற்கு அபாயகர ஒளடதங்கள் சட்டத்தினை கீழ் பதிவு செய்யப்பட்ட மருந்துகளாக காணப்படும். இவற்றினை நோயாளிக்கு வழங்கும் போது அதற்கான பதிவுகள், எத்தனை மாத்திரை வழங்கப்பட்டது, அவை பயன்படுத்தப்பட்டுள்ளதா, மிகுதி உள்ளதா என்பது தொடர்பான பதிவுகள் மற்றும் நேரடி கண்காணிப்பில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே தற்போது யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குறித்த வலி நீக்கி மருந்தானது வகுப்பு 2 பி யினுள் அடங்குகின்றது. 

எனினும் குறித்த மருந்தில் போதை தன்மை அதிகமான உள்ளது அல்லது அதனை பயன்படுத்தும் போது போதை தன்மை வரும் என்கின்ற போது இந்த மருந்து தொடர்பில் அனைத்து துறையினருமே அவதானமாக இருந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

அதற்குமப்பால் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்திலேயே குறித்த மருந்து அதிகளவில் முகவரிடம் இருந்து வழங்கப்பட்டுள்ளது. 

அது மாத்திரமின்றி வவுனியாவில் இவ்வருடத்தில் இரு மருத்துவர்களின் பெயர்களில் 1000 இற்கும் மேற்பட்ட பெட்டிகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது மாத்திரமின்றி வவுனியாவில் மூடப்பட்டு நீண்ட காலமாகிய மருந்தகமொன்றுக்கும் குறித்த சர்ச்சைக்குரிய மருந்து வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளதுடன் ஆயுர்வேத மருந்துகளை மாத்திரமே வழங்க கூடிய ஆயுர்வேத வைத்தியர் ஒருவருக்கும் 5 பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த மருந்தினை விற்பனை செய்யும் முகவர் இது தொடர்பில் அசண்டையீனமாக இருந்தது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. வலி நீக்கி மருந்து உயிர் கொல்லி போதை மருந்தாக இருக்குமேயானால் இதனை இறக்குமதி செய்தவர்கள் மற்றும் விற்பனை முகவர்கள் இம் மருந்து அதிகளவில் விற்பனை செய்யப்படும் போது பொலிஸாருக்கோ அல்லது சுகாதார துறையினருக்கோ தெரியப்படுத்தியிருக்க வேண்டிய தேவை உள்ளது.

மருந்து மற்றும் உணவு பரிசேதகர்களின் திடீர் பரிசோனையின்போது கண்டு பிடிக்கப்படும் வரை அசண்டையாக இருந்தமை தொடர்பில் சுகாதார திணைக்களம் கவனம் செலுத்துமா என்பதனை பொறுத்திருந்து அவதானிக்க வேண்டியுள்ளது.

இதற்குமப்பால் வவுனியா மாவட்டத்தில் ஆயுர்வேத வைத்தியர், மூடப்பட்ட மருந்தகம், வட மாகாணத்தில் பணியாற்றாத வைத்தியர், கடந்த இரண்டு வருடங்காக மாகாணத்தில் இல்லாத வைத்தியர் ஒருவரின் பெயர் அடங்கலாக 24 மருந்தகங்கள் மற்றும் மருந்தவர்களின் பெயர்களுக்கு குறித்த மருந்து விநியோகிகப்பட்டுள்ள நிலையில் இவை தொடர்பான அவதானிப்பு செய்ய வேண்டிய தேவை சுகாதார திணைக்களத்தினருக்கு உள்ளதனையும் மறுப்பதற்கில்லை. 

இந்நிலையில் வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் போதை மருந்து விற்பனை செய்யப்பட்ட மருத்துவர் தொடர்பில் விசாரணை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் குறித்த அதிகாரி தனக்கு கீழ் பணியாற்றும் உணவு மற்றும் மருந்து பரிசோதகர் இது தொடர்பில் கவனமெடுக்கவில்லையா என்பதிலும் அவதானம் செலுத்த வேண்டும். 

வவுனியாவை பொறுத்தவரையில் இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள வைத்தியர் ஒருவரில் பெயரில் இவ்வருரும் இரண்டாம் மாதம் குறித்த மருந்து 280 பெட்டிகளும் 5ஆம் மாதம் 400 பெட்டிகளும் 7 ஆம் மாதம் 400 பெட்டிகளுமாக 1080 பெட்டிகளும் வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் உள்ள மருத்துவரொருவரின் பெயரில் 2 ஆம் மாதம் 200 பெட்டிகளும் 4 ஆம் மாதம் 100 பெட்டிகளும் 7 ஆம் மாதம் 360 பெட்டிகளும் 8 ஆம் மாதம் 360 பெட்டிகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் குறித்த மருந்துவர்கள் தமது வைத்தியசாலையின் தேவைகாக இதனை பெற்றார்களாக அல்லது அதிகளவான மருந்துகளை பெறும் போது இலவசமாக மருந்துகள் கிடைக்கும் என்பதனால் பல மருந்தகங்கள் இணைந்து ஒரு மருத்துவரின் பெயரில் பெற்று பகிர்ந்து எடுத்தனரா இல்லையேல் விற்பனை பிரதிநிதிகள் தமது மாதாந்த விற்பனையை காட்டுவதற்காக மருந்துவர்களின் பெயர்களில் பற்றுச்சீட்டை இட்டு அப்பொருட்களை அங்கு கொண்டு சென்று வேறு இடங்களுக்கு மாற்றினார்களா என்ற கோணங்களில் விசாரணைகள் செய்யப்பட வேண்டிய தேவை சுகாதார திணைக்களத்தின் பக்கமே உள்ளதனை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதற்குமப்பால் விற்பனை முகவர்களும் குறித்த மருந்துகள் விற்பனை செய்யப்படும் போது குறித்த வைத்தியர்தான் குறித்த மருந்துகளை கோரினாரா இல்லையா என்பதனை பொருட்களை விநியோகிக்கும் போது ஆராய்ந்திருக்க வேண்டிய தேவையும் உள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் குறித்த வலிநீக்கி மருந்தானது தொடர்ச்சியாக பயன்படுத்தும் ஒருவர் அதற்கு அடிமையாக்கி அதனை ஒரு போதைக்கான மாத்திரையாக பயன்படுத்துவார்கள் என்பதனை மறுப்பதற்கில்லை.

இந்நிலையில் மருந்துவர்களை குறித்து வைத்து அவர்களுக்கு கலங்கத்தினை ஏற்படுத்தும் செயற்பாடாக இதனை கொள்ளாமல் வட மாகாணம் மட்டுமன்றி இலங்கை முழுவதம் இளம் சமூகத்தினை பல்வேறு வடிவில் வரும் போதையில் இருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அனைவரது கைகளிலும் உள்ளதுடன் அதற்காக இன மத பேதமின்றி ஒன்றிணைய வேண்யடி தேவையையும் குறித்த சம்பவங்கள் சுட்டி நிற்கின்றது என்பதே ஜதார்த்தம்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *