
வடக்கு மாகாணத்தில் தமிழ் இளைஞர்களை தமது இனம் பற்றியோ தேசம் பற்றியோ சிந்திக்கவிடாது தடுக்கும் நோக்கில் திட்டமிட்டு உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை ஆயுதப் படைகளே ஊக்குவிக்கின்றன என நாடளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது எதிர்கால சந்ததியினரை மீட்க வேண்டிய பொறுப்பு வெறுமனே அரசியல்வாதிகளிடம் மட் டும் சுமத்தமுடியாது. இது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும்.
வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை இளையோர் மத்தியில் பூதாகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இளையோர் தமது இனம் பற்றியோ தேசம் பற்றியோ சிந்திக்கவிடாது தடுக்கும் நோக்கிலேயே திட்டமிட்டு போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுகிறது.
சட்டவிரோத செயல்கள், வன்முறைச்சம்பவங்கள், விபத்துக்கள் நாள்தோறும் தலைதூக்கியுள்ளன. இதற்கு பிரதான காரணம் இளையோர் மத்தியில் ஏற்பட்டுள்ள போதைப்பொருள் பாவனை அதிகரிப்பே. அரசாங்கம் தமக்கெதிரான எதிர்ப்பு சக்திகளை அடக்க போதைப்பொருளை கொண்டுவர ஆயுதப்படைகளை ஊக்குவிப்பவர்களாகப் பயன்படுத்துகின்றது.
நாட்டிலுள்ள படைகளில் ஏறத்தாழ 70 சதவீதமானவர்கள் வடக்கு- கிழக்கு மாகாணங்களிலேயே குவிக்கப்பட்டிருக்கின்றனர். பெருந்தொகையான கஞ்சா இங்கு கடத்தப்படுகின்றது. தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கவும் முடிந்த ஆயுதப்படைகளுக்கு போதைபொருளை தடுக்கும் வல்லமை இல்லையா? இந்தச் சதி முயற்சியிலிருந்து எமது எதிர்கால சந்தத்யினரை மீட்க வேண்டிய பொறுப்பு வெறுமனே அரசியல்வாதிகளிடம் மட்டும் சுமத்தமுடியாது.
இதனைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பினரும் இணைந்து கூட்டுப் பொறுப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும் ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து இளம் சமூகத்தினரை அழிவில் இருந்து மீட்க வேண்டும் – என்றார்.
பிற செய்திகள்