மருத்துவமனைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் – எரிசக்தி இராஜாங்க அமைச்சர்

நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் மருத்துவமனைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணம் செலுத்தாமையால் கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இவ்வாறு தெரிவித்தார்.

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மின்சாரக் கட்டணம் செலுத்தாத காரணத்தினால் இரண்டு தடவைகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 26ஆம் திகதி சிற்றுண்டிச்சாலை மற்றும் மருத்துவமனையின் பாதுகாப்புப் பிரிவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், கடந்த வாரமும் மருத்துவமனையிலும் இதேபோல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *