எக்ஸ்ரே – ஸ்கேன் பரிசோதனை அறிக்கைகளை வழங்குவதில் சிக்கல்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் அவற்றின் அறிக்கைகளை வைத்தியர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழிநுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாககுறித்த பரிசோதனை முடிவுகள் அச்சிடப்படாமல் இணையத்தளம் ஊடாகவே வைத்தியர்களுக்கு வழங்கப்படுகின்றன.

எனினும் இணையம் ஊடாக குறித்த பரிசோதனை முடிவுகளை வைத்தியர்களுக்கு வழங்கும் கணனி கட்டமைப்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளமையால் இந்த செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நாளாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எக்ஸ்ரே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் 250க்கும் மேற்பட்ட சி.டி.ஸ்கேன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் ராகம போதனா வைத்தியசாலை மற்றும் ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை தவிர, கொழும்பு தேசிய வைத்தியசாலை மாத்திரமே எம்.ஆர்.ஐ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்படி, தேசிய வைத்தியசாலையில் நாளாந்தம் 60 எம்.ஆர்.ஐ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

இந்தநிலையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பரிசோதனை முடிவுகளை வைத்தியர்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழிநுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சாணக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது குறித்த பரிசோதனைகளுக்காக நோயாளர்களை தனியார் தரப்பினரிடம் அனுப்பும் மாஃபியா இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பரிசோதனைகள் தொடர்ந்தும் நடத்தப்பட முடியாமல் போகுமாயின் நோயாளர்கள் தனியார் துறையினரிடம் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

இதற்காக 2 ஆயிரம் ரூபா முதல் ஒரு லட்சம் ரூபா வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுமெனவும் அரச கதிரியக்க தொழிநுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சாணக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *