ஒட்டுசுட்டான் மருத்துவமனையில் மருந்துக் கலவையாளர் இல்லை

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச மருத்துவமனையில் சுமார் ஒரு மாதகாலமாக மருந்துக் கலவையாளர் இல்லாமையால் நோயாளர்கள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் நாள்தோறும் ஒட்டுசுட்டான் பிரதேச மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்கின்றனர்.

முத்துஐயன்கட்டு உள்ளிட்ட தூரஇடங்களிலிருந்து முச்சக்கரவண்டிகளுக்கு அதிக பணம் செலுத்தி மக்கள் மருத்துவமனைக்கு வந்தபோதும் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது.

இதுதொடர்பில் உரிய அதிகாரிகள் மருந்துக் கலவையாளர் ஒருவரை நியமிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்– என்றனர்.

இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் மு.உமாசங்கரை தொடர்பு கொண்டு கேட்டபோது,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 33 மருந்துக் கலவையாளர்கள் இருக்கவேண்டிய நிலையில் 21 பேர் மாத்திரமே உள்ளனர். அவர்களில் 4 பேர் விடுமுறையில் உள்ளதால் 17 பேர் மாத்திரமே கடமையிலுள்ளனர்.

மூன்று மருத்துவமனைகளில் நிரந்தமாகவே மருந்து கலவையாளர் இன்றி சேவை வழங்கப்படுகிறது. ஒட்டுசுட்டான் மருத்துவமனையில் சேவையிலிருந்த மருந்துக் கலவையாளர் நீண்டகாலமாக விடுமுறையில் உள்ளார். இதனாலேயே இவ்வாறான நிலை காணப்படுகிறது– என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *