புத்தளம் – குருநாகல் பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் 14 நாட்களின் பின்னர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புத்தளத்தைச் சேர்ந்த ஷரீப் முஹம்மது சிஹான் (வயது 48) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கடந்த 16 ஆம் திகதி புத்தளம் – குருநாகல் வீதியில் அரசியல் பிரமுகர் ஒருவரின் வாகனம் ஒன்று வீதியில் பயணித்த துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்த குறித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர், மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் விபத்து இடம்பெற்று 14 நாட்களின் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் புத்தளம் தலைமையை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்