பதவிகளுக்காக இனவாதக் கும்பலிடம் சரணடைந்து துரோகம் செய்யவில்லை! – சஜித் பெருமிதம்

“நான் ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்காக இனவாதக் கும்பலிடம் சரணடைந்து மக்களுக்குத் துரோகம் செய்யவில்லை.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நுவரெலியா, ஹட்டன் பிரதேசத்தில் இன்று (30) நடைபெற்ற தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமையகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அன்று நான் ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டிருந்தால் மொட்டுவின் பாதுகாவலராக மாற வேண்டியிருந்திருக்கும். இனவாத, மதவாத கும்பலுடன் இணைய வேண்டியிருந்திருக்கும். இனவாதி ஒருவரின் முன்னால் சென்று சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டி ஏற்பட்டிருக்கும். அவ்வாறானதொரு விடயத்துக்கு நான் ஒருபோதும் தயாராகவில்லை.

எனது சுயமரியாதையை நான் அதிகம் மதிக்கின்றேன். பதவிகளுக்காக எனது சுயமரியாதையைக் காட்டிக் கொடுக்காத பயணத்தை மேற்கொள்கின்றேன்.

சாம்பலில் இருந்து எழ முயற்சிப்பவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்நாட்டின் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி அரசை அமைக்கத் தயாராக இருக்கின்றார்கள்.

கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவுகளால் முழு நாடும் வக்குரோத்தடைந்தாலும், குறிப்பாக பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை முற்றாகவே சரிந்தது.

மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகுந்த புரிதலுடன் இருந்தார். அவர்களுக்கு குடியுரிமை வழங்குதற்காக அர்ப்பணிப்புடன்  செயற்பட்டார்.

பெருந்தோட்டங்களில் வாழும் மக்களை எப்போதும் தொழிலாளிகளாகவே வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் அதை முற்றிலும் மாற்றுவோம். அவர்களுக்கு மிக சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.

அடிமைக் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும். அன்றும் இன்றும் தோட்டங்களில் வாழும் மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும் எனக் கூறுவது ஒரு ஏற்பாட்டுடனையே ஆகும்” – என்றார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உப தலைவரும் நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தத் திறப்பு விழாவில், கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரகமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்த 6 குடும்பங்களுக்குத் தேவையான நிதியுதவியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *