
வடக்கில் போதைப்பொருளை கட்டுப் படுத்த முப்படைகளுடன் முக்கிய கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜயதாசராஜ பக்ச தெரிவித்துள்ளார்.
யாப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
கடந்த வாரம் இலங்கை அரசியலமைப்பில் 21 வது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கு எமக்கு சட்டவாக்க கழகத்தின் ஆதரவு கிடைத்திருந்தது. இந்த திருத்த சட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள நிர்வாக சபைகள் அனைத்தும், அரசியல் தலையீடுகள் இன்றி சட்ட ஆட்சியின் கீழ் இயங்குகின்றன என்பதை நம்மால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் நிர்வாக சபைகள் மக்களை பாரபட்சமின்றி நடத்துவதும் உறுதிப்படுத்தப்படுகிறது. எவ்வாறாயினும் 21வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து விட்டோம் என்பதால் எமது பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விட்டன என்று சொல்வதற்கு இல்லை.
மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு முதலில் நாம் பாராளுமன்றத்திற்கு மக்களின் பிரதிநிதிகளாக சரியான நபர்களை தேர்வு செய்வதற்கான உரிய விதிமுறைகளை கட்டமைக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்று முறையான பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான ஒரு ஒழுங்கமைப்பையும் குழுவையும் கொண்டு வர வேண்டும் எனும் வேண்டுகோளை நான் பாராளுமன்ற (பேச்சாளரிடம்) முன் வைத்துள்ளேன்.
இது சரியான முறையில் அமுல்படுத்தப்படுமாக இருந்தால் நாட்டில் உள்ள மக்கள் அனைவரது பிரச்சினைகளும் பாரபட்சம் இன்றி சரியான முறையில் தீர்க்கப்பட முடியும் என நான் நம்புகிறேன்.
எனது அமைச்சினுள் மொத்தம் மூன்று அலுவலகங்கள் உள்ளடங்குகின்றன. முதலாவது, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம், இரண்டாவது காணி நட்ட ஈடு தொடர்பான அலுவலகம் மூன்றாவது ஒற்றுமை மற்றும் மறுசீரமைப்பு அலுவலகம்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவல்கள் மிகவும் தாமதமாக மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தன. நான் பதவியேற்றதின் பின்னர் இது அதிகரிக்கப்பட்டுள்ளது, நான் அறிந்ததன் படி நான் பதவியேற்ற காலத்தில் 65 பைல்கள் மாத்திரமே முடிக்கப்பட்டு இருந்தன. தற்போது இது 2500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருட இறுதிக்குள் இவற்றை முற்றாக தீர்ப்பதே எனது நோக்கம்.
அடுத்து காணி நட்ட ஈடு தொடர்பாக பார்க்கும்போது, பிரச்சினை காலத்தில் மக்களிடம் இருந்து ராணுவம் கைப்பற்றி இருந்த நிலங்களில் 94 வீதமான நிலங்கள் தற்போது மக்களுக்கு மீண்டும் கையளிக்கப்பட்டு உள்ளது. மிகுதி ஆறு வீதம் மாத்திரமே இன்னும் கையளிக்கப்படாமல் உள்ளது.
இந்த நிலம் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எனது அமைச்சின் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட ஒரு விசேடக் குழுவை நான் நியமித்துள்ளேன். எதிர்வரும் நாட்களில் இந்த நிலம் தொடர்பான பிரச்சனைகள் நேரில் சந்தித்து தீர்க்கப்படும்.
அடுத்து தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விவகாரங்கள். கடந்த வாரம் இதில் எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்கள்.
ஏனையவர்களை விடுதலை செய்வது தொடர்பில் நாங்கள் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். இந்த பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்பட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கை மற்றும் சமாதானத்தை மீண்டும் கட்டி எழுப்பி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நாம் முயற்சி செய்வோம்.
நாளையும் நாளை மறுதினமும் நாங்கள் நீதி அமைச்சு மற்றும் சில அமைச்சுகளுடன் இணைந்து இரண்டு நடமாடும் சேவைகளை ஒழுங்கமைத்து உள்ளோம். இதன் நோக்கம் வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் சிக்கல்களை கேட்டு அவற்றை தீர்த்து வைப்பது. குறிப்பாக இந்தியாவில் இருந்து மீண்டும் நாட்டிற்கு திரும்பியவர்களில் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் காணி உறுதிகள் போன்றவற்றை இழந்துள்ள மக்களுக்கு மீண்டும் அவற்றை பெற்று தருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம்.
முதலாவது நிகழ்வு யாழ்ப்பாணத்திலும் இரண்டாவது நாள் நிகழ்வு கிளிநொச்சியிலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அடுத்து வடக்கு மாகாணத்தில் தற்போது அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை தடை செய்வது தொடர்பாக முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம். தற்போது வட மாகாணத்தில் பல இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர்.
அது மாத்திரம் இன்றி வட மாகாணத்தில் இருந்து போதைப் பொருள் கடத்துபவர்கள் அங்கிருந்து இலங்கையின் பிற மாகாணங்களுக்கும் போதைப் பொருள்களை எடுத்துச் செல்வதை அறிய முடிகிறது. எனவே இவற்றை கட்டுப்படுத்துவது அவசியம். இது தொடர்பாக வடமாகாண ஆளுநர், மாவட்ட செயலாளர்கள், பிரதம போலீஸ் அதிகாரிகள் முப்படை உறுப்பினர்கள் போன்றவர்களுடன் நாம் கலந்துரையாட தீர்மானித்துள்ளோம் என்றார்.
பிற செய்திகள்