ஃபைசர் தடுப்பூசிகளை இனிமேல் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது – சுகாதார அமைச்சு

கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் ஃபைசர் தடுப்பூசிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மக்கள் பெற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 6 இலட்சம் ஃபைசர் தடுப்பூசிகள் நேற்றைய தினம் காலாவதியானதையடுத்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபைசர் தடுப்பூசிகள் பூஸ்டர் டோஸுக்காக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலும் அந்த அளவின் ஒரு பகுதி இரண்டாவது பூஸ்டர் டோஸுக்கும் பயன்படுத்தப்பட்டது.

60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 27 இலட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர் என்றாலும் சுமார் 2 இலட்சம் பேர் மட்டுமே இரண்டாவது பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த ஃபைசர் தடுப்பூசிகள் காலாவதியானாலும் உடனடியாக அழிக்கப்படாது என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்கத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அறு இலட்சத்து எழுபதாயிரத்து எழுபதாக பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *