
கொழும்பில் இன்று (புதன்கிழமை) பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டப்பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இன்றைய போராட்டத்தில் சுமார் 20 அரசியல் கட்சிகள் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, முன்னிலை சோசலிச கட்சி உள்ளிட்ட 20 கட்சிகளும் 150க்கும் அதிகமான சிவில் சமுக அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்கவிருப்பதாக அறிவித்துள்ளன.
எனினும் இந்த போராட்டங்களைக் கைவிடுமாறு அரசாங்கத்தினாலும் பல்வேறு வர்த்தக அமைப்புகளாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கை வர்த்தக சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக அமைப்புகள் இந்த போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளன.
நாட்டின் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு பொருளாதார விடயங்கள் மீட்சிக் காணும் சூழ்நிலையில், சர்வதேசத்தின் உதவிகள் கிடைக்கப்பெறவுள்ள தருவாயில் இந்த போராட்டமானது அவற்றை சீர்குலைக்கும் செயற்பாடாக அமையும் என்றும் அந்த அமைப்புகள் கூட்டறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளன.