பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டோருக்கு அநீதி – இழப்பீடு கோரும் தேசிய சமாதான பேரவை

ஜனாதிபதியினால் அண்மையில் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிலர் தமது தண்டனை காலத்துக்கு மேலாக பல வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று தேசிய சமாதான பேரவை வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதிக்குரிய பொதுமன்னிப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, அரசியல் கைதிகள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் மூன்று பேர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை படுகொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில் தண்டனை அனுபவித்து வந்தவர்களாவர்.

இந்த குண்டுத்தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தமது கண்பார்வையை இழந்தார். எனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது மன்னிப்பின்கீழ் அவர்களை விடுவிப்பதற்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தமது சம்மதத்தை வெளியிட்டார்.

இதன்மூலம், சித்திரவதைக்குள்ளாகி பிளவுபட்டுள்ள எமது நாட்டில் மக்கள் மீண்டெழத் தேவையான பெருந்தன்மையை முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க நிரூபித்துள்ளார் என தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், விடுவிக்கப்பட்ட எட்டு கைதிகளில் நால்வர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை விட நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என்று ஜனாதிபதி செயலகம் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒப்புக்கொண்டுள்ளதாக தேசிய சமாதான பேரவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விடுவிக்கப்பட்டவர்களில் மூன்று கைதிகளுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையை பெற்றிருந்தனர்.

எனினும், மற்றுமொரு கைதிக்கு நீதிமன்றினால் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் 14 ஆண்டுகள் சிறைவாசம் இருந்துள்ளார். இன்னுமொருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் 14 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார்.

அவ்வாறே, 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை இருந்த இரண்டு கைதிகளும் ஜனாதிபதியின் மன்னிப்பைப் பெற்றவர்களில் அடங்குவர்.

சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளின் அடிப்படையில் இது ஒரு பாரிய மனித உரிமை மீறல் என்றும், அவர்களை இவ்வாறு நீண்ட காலமாக சிறையில் வைத்திருந்தமை ஒரு சகிக்க முடியாத அதிகார துஷ்பிரயோகம் என்றும் தேசிய சமாதான பேரவை மேலும் வலியுறுத்துகிறது.

தண்டனை முடிந்து பல ஆண்டுகளாக கைதிகளின் சுதந்திரத்தை மறுப்பது, சட்டத்தினை அவமதிப்பதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான அதிகார துஷ்பிரயோகத்தையும் காட்டுகிறது.

இவர்கள் மீண்டும் வாழ்க்கை அனுபவிக்கக்கூடிய, குடும்பங்களைக் கொண்ட மனிதர்கள். அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அப்பாற்பட்ட சிறைவாசத்தின் கொடூரத்தை எதிர்கொள்ளக்கூடாது பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கையில் காவல்துறை. சிறைச்சாலை மற்றும் நன்னடத்தை திணைக்களங்கள் தனித்தனியாக செயற்படுவதுடன், மிகக் குறைந்த ஒருங்கிணைப்புடனேயே செயற்படுகின்றன. அத்துடன் இது இலங்கை நீதி முறைமையின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இவ்வகையில் பாதிக்கப்பட்ட பெருமளவிலானோர் வழக்குத் தொடரப்படாமல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதால், அவர்களை விரைவில் விடுதலை செய்யுமாறு தேசிய சமாதான பேரவை அரசாங்கத்திடம் கோருகிறது.

இந்த நிலையில், குறித்த கைதிகளுக்கு, தமது தண்டனை காலத்துக்கு மேலதிகமாக சிறையிலிருந்த வருடங்களை கணக்கிட்டு அதற்கு அரசாங்கம் உரிய இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.

அத்தகைய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கத் தயாராக இருந்தால், இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தாம் ஆதரவளிக்க தயாரென சமாதான பேரவை தெரிவித்துள்ளது.

தேசிய சமாதானப் பேரவையானது இலங்கையில் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வை நோக்கிச் செயற்படும் ஒரு சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற அமைப்பாகும்.

அனைத்து சமூகங்களின் சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்படும், அமைதியான மற்றும் வளமான இலங்கையை உருவாக்க செயற்படுகிறது.

தேசிய சமாதான பேரவையின் கொள்கையானது, நாட்டின் பல்வேறு இன மற்றும் மதச் சமூகங்களைச் சேர்ந்த பல்வேறு தரப்புகளில் இருந்து ஈர்க்கப்பட்ட 20 உறுப்பினர்களைக் கொண்ட அதன் ஆளுகை குழுவால் தீர்மானிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *