
பொருளாதாரத்தில் மிகவும் வீழ்ச்சியடைந்த இலங்கையை முதலாவதாக வங்குரோத்து அடைந்துள்ள நிலையிலிருந்து மீட்டெடுப்போம். பனிப்பாறையில் மோதிய டைட்டானிக் கப்பல் போன்ற இலங்கையை காப்பாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறேன். தேயிலை உற்பத்தித்துறை, விவசாயம், சுற்றுலா உள்ளிட்ட சகல துறைகளை முன்னேற்ற வழிவகுப்பேன்.
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாம் வங்குரோத்தடைந்துள்ளோம் எனும் நிலையை மாற்றுவதற்கு அவசியமான நகர்வுகளை நாம் முன்னெடுத்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
போட்டிமிகு சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டும். ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தில் இது மிகவும் இன்றியமையாதது. ஆரம்பத்தில் தேயிலை தொழிற்துறையில் கிடைத்த வெற்றியை மீண்டும் உறுதி செய்ய வேண்டும்
விவசாயத்தை நவீனப்படுத்தும் வேலைத்திட்டங்களிலும் இறங்கியுள்ளோம். இதன் ஊடாக தேயிலைக் கைத்தொழிலுக்குப் பெரும் மதிப்பு ஏற்படும்.
தற்போது உரம் கையிருப்பில் உள்ளதால் விவசாயத்துக்குப் புத்துயிரளிக்க வேண்டும். நெல்லில் ஆரம்பித்து, தேயிலை மற்றும் ஏனைய பயிர்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
பெரும்போகம் மூலம் அடுத்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிக விளைச்சல் கிடைக்குமாக இருந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மைய ஏற்படுத்த அது பெரும் உதவியாக இருக்கும்.
அடுத்து சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டு டிசெம்பர் மாதத்துக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு செயற்பட்டால் இதனை அடைய முடியும். வெளிநாட்டு நிதி கையிருப்பை இப்போது அதிகரிக்க வழியில்லை. மற்ற எல்லா வழிகளையும் இழந்துவிட்டதால், நமது தொழில் முயற்சிகளை டொலரில் விற்பதே வெளிநாட்டு மூலதனத்தை திரட்ட ஒரே வழியாக இருக்கும். இதன் ஊடாக கையிருப்பில் சுமார் 4 பில்லியன் டொலரை சேர்க்க முடியும். இது ரூபாவை மேலும் வலுப்படுத்தும்.
நாம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு் சர்வதேச நாணய நிதியத்திடம் கலந்துரையாடி வருகிறோம்.
கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டியுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் 3.2 டிரில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதனால், உற்பத்தியை பெருக்குவதைத் தவிர, இப்பிரச்சினைகளை குறுகிய வழியில் தீர்க்க முடியாது.
இந்த நெருக்கடியுடன் எமது பொருளாதாரம் தடைப்பட்டுள்ளது. பணவீக்கம், நிதி நெருக்கடி ஆகிய அனைத்தும் எமது பொருளாதாரத்துக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளன. அதிலிருந்து மீள வேண்டும்.
விவசாயம் உள்ளிட்ட அனைத்துக்கும் வரி அறவிட வேண்டியுள்ளது. அதனைத் தவிர எம்மிடம் வேறு வழியில்லை. நாம் அதை படிப்படியாக செய்திருக்கலாம் என்று நான் நினைத்தாலும் எமக்கு பணம் தேவைப்பட்டதால் எம்மால் அவ்வாறு செய்ய முடியவில்லை.
நாம் எம்மிடமுள்ள வெளிநாட்டுக் கையிருப்பை தக்க வைத்துக் கொள்வதுடன் இறக்குமதியை மட்டுப்படுத்த வேண்டும். அதன் ஊடாக, எம்மால் எரிபொருள், உரம் மற்றும் மருந்து ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
வருமானம் இல்லாமல் போனதால் எமக்கு கட்டணங்களைச் செலுத்துவதற்கும் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் முடியாமல் போயுள்ளது. எனினும் 1.7 மில்லியன் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கவும் கடன்களை மீளச் செலுத்தவும் வேண்டியுள்ளது என்பதை நாம் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.
அமெரிக்கா போன்ற நாடுகள் எமக்கு உதவ முன்வந்துள்ளன. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
‘தேயிலை உற்பத்தித் துறையில் கடந்து வந்த இக்கட்டான நிலைமைகள்’ தொடர்பில் அதன் தலைவர் கூறியிருந்தார். தேயிலைக் கைத்தொழிலை மறுசீரமைத்து உங்களின் ஆதரவுடன் முன்னோக்கி செல்லும் வேலைத்திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம்
நாடு, டைட்டானிக் கப்பல் போன்று பனிப்பாறையில் முட்டியதன் பின்னரே நான் அதனைப் பொறுப்பேற்றுள்ளேன். கப்பலைக் காப்பாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வேன்– என்றார்.