இந்த மண் ஒல்லாந்தர், போர்த்துக்கேயர் காலத்திலிருந்தே எங்கள் முன்னோர்களின் சொத்து. எங்கள் பரம்பரை ஆண்ட பூமி. 1990 ஆம் ஆண்டுகளின் பின்னர் மிகவும் கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதாவது வீட்டு வாடகையிலும், அகதி முகாம்களிலும் என 33 வருடங்களுக்கு மேலாக ஓடி திரிகிறோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
வலி. வடக்கு காணி அபகரிப்புக்கு எதிராக இன்று போராட்டம் இடம்பெற்றிருந்தது.

போராட்டத்தின் பின் சமூகம் மீடியாவுக்கு கருத்துதெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் அந்த காணிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இல்லாமல் சொந்தமாக உழைத்து செல்வந்தராக இருந்தோம். பணத்தின் அருமை தெரிமால் வளர்ந்து வந்தோம்.
இடம்பெயர்ந்து செல்லும் போது ஒரு கைபிடி சோற்றுக்கு வழி இல்லாமல் இருந்தோம். இப்பொழுது கூலி வேலை செய்கிறோம். எங்கள் சொந்த காணிகளில் இருந்து சொந்தமாக தொழில் செய்வதற்கு விட்டுத்தர கேட்கின்றோம். நான் பிறந்த மண்ணில் என்னை தகனம் செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை
இந்த காணிகளில் நாங்கள் விவசாயம் செய்து தான் சீவித்தோம். இராணுவம் அந்த காணிகளை தற்போது விடுகிறார்கள் இல்லை. தாங்கள் அக்காணிகளில் தோட்டம் செய்து சீவிக்கிறார்கள். நாங்கள் விவசாயம் செய்து வரும் போது கடையில் சென்று ஒரு பொருள் வாங்கியதில்லை.
எங்களது காணிகளை விட்டுத்தந்தால் நாங்கள் சிறப்பாக வாழுவோம். இந்த காணிகளை மீட்டு தரும்படி யாரிடம் கேட்பது, கடவுளிடம் தான் கேட்க வேண்டும். இராணுவத்தினரிடம் கேட்க முடியாது.- என்றனர்.