
கடலட்டைப் பண்ணைகளுக்கு முதலீடு செய்வதாக கூறிக்கொண்டு இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் சீ்னா ஊடுருவி இருப்பதாக ஆதாரமற்ற பொய்களை மீண்டும் மீண்டும் கூறினாலும் அது உண்மையாகாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடலட்டைப் பண்ணையாளர்களுடன் இன்றைய தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘கடலட்டை பண்ணைகளில் முதலீடுகளை செய்யும் நோக்குடன் இந்திய மற்றும் சீன ஆகிய நாடுகளை சேர்ந்த இரண்டு தரப்பினர் என்னை சந்தித்திருந்தனர்.
எமது மக்களினால் எதிர்பார்ப்போடு அமைக்கப்பட்டு வருகின்ற கடலட்டைப் பண்ணைகளுக்கு கடலட்டை குஞ்சுகள் தேவையாக இருக்கின்றன. வருடந்தோறும் இரண்டரை கோடி கடலட்டை குஞ்சுகளை வழங்கக் கூடிய தரப்பினரோடு தொடர்ந்து பேசுவதற்கு தயாராக இருப்பதாக இரண்டு தரப்பினருக்கும் நேரடியாகவே தெரிவித்திருக்கின்றேன்.
எனது எதிர்பார்ப்பை தங்களினால் நிறைவேற்ற முடியும் என்று இரண்டு தரப்பினரும் தெரிவித்திருக்கின்ற போதிலும், இதுவரை எந்தவிதமான முன்நகர்வுகளும் இடம்பெறவில்லை.
2017 ஆம் ஆண்டு நல்லாட்சி என்று சொல்லப்பட்ட அரசாங்க காலத்தில் அனுமதிக்கப்பட்ட குயிலான் நிறுவனத்தை சேர்ந்த சீனப் பிரஜைகள் சிலரைத் தவிர வேறு வெளிநாட்டுப் பிரஜைகள் யாரும் இங்கே – இதுவரை கடலட்டைப் பண்ணைகளுடன் தொடர்புபட்டு இல்லை என்தே உண்மை.
எனவே மக்களை குழப்பும் வகையில் குறுகிய நலன்களுடன் சொல்லப்படுகின்ற பொய்கள் தொடர்மாக விழிப்பாக இருக்க வேண்டும்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்