பாதீட்டை தயாரிக்கும் பணி மும்முரம் – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு

வரவு செலவுத் திட்ட ஆவணம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதால் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது பங்களிப்பை நிதி அமைச்சுக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சுக்கள் மற்றும் அமைச்சர்களின் யோசனைகள் மற்றும் கருத்துக்கள் இதுவரை நிதியமைச்சுக்கு பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால், அதனை விரைவாக பெற்றுக்கொடுக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2023 வரவு செலவுத் திட்ட ஆவணம் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், நிதி அமைச்சு மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் இராஜாங்க அமைச்சுக்கள் அரச நிறுவனங்கள் தனியார் துறை வெளிநாட்டு தூதுவராலய சேவைகள் மற்றும் சர்வதேச அபிவிருத்தி நிதிய நிறுவனங்கள் மூலமான தொழில்நுட்ப மட்ட மேற்பார்வை இடம்பெற்று வருகிறது.

அத்துடன் வரவு செலவுத்திட்டத்திற்கான விசேட யோசனைகளை இனங்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பாராளுமன்ற விவகாரம் தொடர்பான தெரிவுக்குழு மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்ட கால அட்டவணைக்கிணங்க எதிர்வரும் (14) பிற்பகல் 1.30 மணிக்கு நிதியமைச்சரான ஜனாதிபதியினால் வரவு செலவுத் திட்ட உரை பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெறும் காலங்களில் அமைச்சர்கள் உத்தியோகபூர்வமாகவோ தனிப்பட்ட ரீதியாகவோ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தியாவசிய காரணங்களன்றி வேறு வெளிநாட்டு பயணங்களை இந்தக் காலத்தில் மேற்கொள்வதை தவிர்க்குமாறும் அவர், அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *