திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலைச்சேனை பகுதியில் அரபிக் கல்லூரி மாணவணொருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை, மட்கோ முகம்மதியா நகரில் வசித்து வந்த அமீர் முகம்மது அஸ்கான் (16வயது) என்ற மாணவனே நேற்று (02) மாலை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா தாருல் ஹிக்மா அரபிக் கல்லூரியில் கல்வி பயின்று வந்த குறித்த மாணவன் குளிப்பதற்காக அருகில் உள்ள கிணற்றிற்கு சென்றதாகவும் , நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சக மாணவர்கள் தேடிப் பார்த்ததாகவும், இதனை அடுத்து குறித்த மாணவனின் செருப்பு கிணற்றுக்கு அருகில் இருந்ததாகவும் இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் கிணற்றில் இறங்கி பார்த்த போது விழுந்து கிடந்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் கிண்ணியா தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் கிண்ணியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் பின்னர் குறித்த மாணவனின் சடலத்தை ஒப்படைக்க உள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் குறிப்பிட்டனர்.