ஜப்பான் தூதுவர் மலையகத்திற்கு விஜயம்!

மலையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி உள்ளிட்ட குழுவினர் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் சந்திப்புக்களை மேற்கொண்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில்  விலயம் செய்த அவர்  , முதலில் கொட்டகலையில் உள்ள காங்கிரஸ் தொழிலாளர் ஸ்தாபனத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

அங்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய அவர், மலையக இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடினார்.

அதன்பிறகு, ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர், அங்கு இடம்பெறும் பயிற்சிநெறிகளை பார்வையிட்டதுடன், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட நவீன கட்டிட தொகுதியையும் பார்வையிட்டார்.

அதன்பின் குறித்த தொழில்பயிற்சி நிலையத்தில் அறிமுகப்படுத்தியுள்ள ஜப்பானிய மொழி கற்கைநெறிகளை மேலும் விருத்திசெய்யவும், இங்கு பயிற்சி பெற்ற இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும், புலமை சார்ந்த தொழில் துறையை அபிவிருத்தி செய்வது சம்மந்தமாகவும் ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி உள்ளிட்ட குழுவினர் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

மேலும், மறைந்த தலைவர் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமான் காலம் முதல் இன்று வரை இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவு தொடர்பாகவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்து வரும் சேவைகள் குறித்தும் இதன் போது ஜப்பான் தூதுவர் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள், பிரதேச சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *