கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் மூலம் தேசிய வீடமைப்பு அதிகாரசபை ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள வீடமைப்புத்திட்டங்களை மீள ஆரம்பிப்பது சம்பந்தமான கலந்துரையாடல் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் இடம் பெற்றது.
இதன் முதற்கட்டமாக அல் ஹித்மத்துல் உம்மா பவுண்டேசனின் உதவியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ள வீடமைப்புத்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் ஒத்துழைப்புடன் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் ரஜீவ சிரிவர்த்தன அவர்களை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது,
இப்பேச்சுவார்த்தையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரானின் முயற்சியினை பாராட்டிய அவர் முயற்சிக்கு பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்து வீடமைப்புத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான எழுத்து மூல அனுமதியினையும் வழங்கினார். இதன் முதற்கட்டமாக கிண்ணியா பிரதேசத்தில் கைவிடப்பட்டுள்ள துவரங்குளம் 1, துவரங்குளம் 2 ஆகிய இரண்டு வீடமைப்புத்திட்டங்களில் காணப்படும் 54 வீடுகளை கட்டிமுடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் அல் ஹித்மத்துல் உம்மா பவுண்டேஷன் பணிப்பாளர் பாத்திஹ் ஹஸ்ஸாலி, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர், நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் சதாத் கரீம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஏனைய வீடமைப்பு திட்டங்களும் படிப்படியாக முன்னெடுக்கப்படும் .

பிற செய்திகள்