இறுதிப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக நேற்றுச் சாட்சியம் வழங்கியது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த மேன்முறையீடு, தவலறியும் ஆணைக்குழுவில் நேற்றுப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 2019ஆம் ஆண்டு குறித்த ஊடவியலாளர் சரணடைந்த விடுதலைப்புலிகள் தொடர்பில் தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் விண்ணப்பித்தபோது, ‘எங்களிடம் புலிகள் சரணடையவில்லை’ என அந்த விண்ணப்பத்தை இராணுவம் மறுத்திருந்ததது. இது தொடர்பான மேன்முறையீடே மூன்று வருடங்களுக்குப் பின்னர் நேற்றுப் பரிசீலிக்கப்பட்டது. இதன்போதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியது.
‘போர் இடம்பெற்ற பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் புலிகளா? பொதுமக்களா? என்பது எமக்கு தெரியாது. நாம் பொறுப்பேற்றுக் கொண்டபோது பதிவுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. எம்மிடம் வந்தவர்களை பேருந்துகளில் ஏற்றி மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைத்தோம். அதன்பின்னர் மறுவாழ்வுப் பணியகமே அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது’ என்று இராணுவம் சாட்சியம் வழங்கியது.
ஆனால், ஊடகவியலாளர் சார்பாக ஆணைக்குழுவில் முன்னிலையான சட்டத்தரணி ஸ்வஸ்திக்கா, இராணுவத்தினரின் குற்றச்சாட்டுக்களை மறுத்ததோடு இராணுவத்திடம் புலிகள் சரணடைந்தமைக்கான ஆதாரங்களை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்தார். மேலும், மறுவாழ்வுப் பணியகத்திடம் இராணுவத்தினர் கூறும் தகவல்கள் இல்லை என்று, மறுவாழ்வுப் பணியகம் வழங்கியுள்ள தகவல்களையும் சட்டத்தரணி ஸ்வஸ்திக்கா ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஆணைக்குழு, ‘அரசாங்கமே இந்த விடயங்களை சர்வதேச அமைப்புகளுக்கு பல முறை வழங்கி இருக்கிறது. எனவே, 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இப்போது மறைப்பதற்கு ஒன்றுமில்லை’ என இராணுவத்துக்கு அறிவுறுத்தியது.
புலிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தமைக்கான எழுத்துமூல சமர்ப்பணங்களை 10 நாள்களுக்குள் இராணுவத்துக்கு ஊடகவியலாளர் வழங்க வேண்டும். அதுபோல இராணுவமும் எழுத்துமூல சமர்ப்பணங்களை விண்ணப்பதாரருக்கு வழங்கவும் ஆணைக்குழு உத்தரவிட்டது. ஜனவரி 4ஆம் திகதி மனு மீள ஆணைக்குழு முன்பாக விசாரிக்கப்படவுள்ளது.